ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்ததற்கு பிரதமர் மோடி அளித்த பதில் வைரலாகி வருகிறது.
ஒடிசாவில் 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சியை வீழ்த்தி, 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
இங்கு 74 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளிலும் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஒடிசாவில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றபோது அங்கு வந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பாஜக மாநில துணைத் தலைவர் பைஜெயந்த் ஜே பாண்டாவிடம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, அவரிடம் ரூ.100 வழங்குமாறு தனது பணத்தைக் கொடுத்துள்ளார்.
இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பைஜெயந்த் ஜே பாண்டா பகிர்ந்துள்ளார்.
அதில், ”ஒடிசாவின் சுந்தர்கார் மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பழங்குடியினப் பெண் ஒருவர் 100 ரூபாயை பிரதமர் மோடியிடம் வழங்கி, அவருக்குத் தான் நன்றி தெரிவித்ததாகக் கூறுமாறு வலியுறுத்தினார். நான் ரூபாய் வேண்டாம் என அவரிடம் விளக்கிக் கூறினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
நான் மனம் திரும்பிப் பணம் பெற்றுக் கொள்ளும் வரை என்னுடைய விளக்கத்தையும் அவர் கேட்கவில்லை. இது ஒடிசா மற்றும் பாரதம் அனுபவிக்கும் மாற்றத்தின் பிரதிபலிப்பாகும். ஜெய் ஜெகநாத்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”இந்த அன்பால் நான் உள்ளம் நெகிழ்ந்தேன். என்னை எப்போதும் ஆசிர்வதிக்கும் நமது பெண் சக்திகள் முன்பு தலை வணங்குகிறேன். அவர்களுடைய ஆசி வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்வேகத்தை எனக்கு அளிக்கிறது” என மோடி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது பாஜக-வினரிடையே வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : உருவாகும் புதிய காற்றழுத்தம் முதல் கங்குவா 2வது சிங்கிள் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : ராகி சீவல்
வால்பாறை : சிறுத்தை தாக்கி சிறுமி பலி!
சபரிமலை பக்தர்கள் கவனம்: நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள்: ஸ்பாட்புக்கிங் 10 ஆயிரம்!
தமிழ்த்தாய் வாழ்த்து: ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும்? – எல்.முருகன் கேள்வி!
