வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் நிறைந்த ஓட்ஸில் கொழுப்பு மற்றும் உப்பு குறைந்த அளவிலே உள்ளதால் இன்று பலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஓட்ஸ் உணவுகள் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே.
இந்த நிலையில் ஓட்ஸுடன் வல்லாரைக் கீரை சேர்த்து பக்கோடா செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பக்கோடா குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். தேர்வு காலத்தில் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.
என்ன தேவை?
ஓட்ஸ் மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு -கால் கப்
வெங்காயம் – ஒன்று
வல்லாரைக் கீரை – 1 கட்டு
இஞ்சித்துருவல் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வல்லாரைக் கீரையை சுத்தம்செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு கலக்கவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கலந்துவைத்துள்ள மாவை கைகளால் சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்துப் போடவும். நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.
குறிப்பு:
மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்துவிட்டால் பக்கோடா கரகரப்பாக (Crispy) இருக்காது. அதனால், தண்ணீர் பார்த்துச் சேர்க்கவும்.