|தொடரும் தீ விபத்து: மருத்துவமனையில் 18 பேர் பலி!

Published On:

| By Balaji

குஜராத் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 18 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,91,64,969 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,11,853 ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 32,68,710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா ஒரு பக்கம் மக்களை அழித்து கொண்டு வரும் வேளையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி தட்டுப்பாடு மற்றும் சில எதிர்பாராத விபத்துகளால் மக்கள் பலியாகி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பரூச் என்ற நெடுஞ்சாலையில் படேல் வெல்ஃபேர் அறக்கட்டளை கொரோனா மருத்துவமனை உள்ளது. இங்கு 50 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று(மே1) அதிகாலை 1 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடி கொண்ட அந்த மருத்துவமனையில் தீ மளமளவென பரவியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் உறங்கிய நிலையிலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள நோயாளிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து சிலர் உயிரிழந்ததையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

படுக்கையில் கிடந்தபடியே நோயாளிகள் தீயில் கருகி இறந்து கிடந்த காட்சி அனைவரையும் பரிதவிக்க வைத்தது. இதுவரை தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ரூ.4 லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா, பல்கார் மாவட்டம் வாசய் பகுதியில் உள்ள விஜய் வல்லப் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share