அதிமுக பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாடு நடத்துவது குறித்து விவாதிக்க டிசம்பர் 5-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் பிரகலாத் ஜோஷிக்கு எழுதிய கடிதத்தில்,
“எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் இல்லை. கட்சியில் சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் மூலமாக அதிமுகவின் தலைமையை அபகரித்து அதில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அவரே அறிவித்துக்கொண்டார்.

இது அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளுக்கு எதிரானது. ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருப்பது தவறானது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று (டிசம்பர் 6) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அம்மா மறைந்திட்ட இந்நன்னாளில் என எடப்பாடி பழனிசாமி வாய்தவறி உறுதிமொழி எடுத்துவிட்டார்.” என்றார்.
தொடர்ந்து அவரிடம் டெல்லியில் இருந்து இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் வந்தது குறித்த கேள்விக்கு, “எல்லாம் நன்மைக்கே, விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.” என்று தெரிவித்தார்.
செல்வம்

Comments are closed.