எடப்பாடிக்கு எதிரான வழக்கு : செப் 30ல் விசாரணை!

Published On:

| By Kalai

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தீா்ப்பளித்தாா்.

தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

பொதுக்குழுவும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

இதே வழக்கில் கடந்த 4ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை ( 30.09.2022 ) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் எம்.ஆர் ஷா மற்றும் கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வர இருக்கிறது.

கலை.ரா

சரிந்தது தங்கம் விலை : பெண்கள் மகிழ்ச்சி!

பொன்னியின் செல்வன்: ஜோராக விற்பனையான டிக்கெட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share