அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை தற்போது ஈரோடு இடைத்தேர்தல் களம் தான் பரபரப்பாக இருந்து வருகிறது. வரும் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே இரட்டை இலை சின்னம் முடங்கி விடக் கூடாது என்பதற்காக ஈரோடு இடைத்தேர்தல் போட்டியில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்தனர்.
தேர்தலில் இருந்து விலகிக் கொண்டாலும் இரட்டை இலைக்காகப் பிரச்சாரம் செய்வோம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
40 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை: மீண்டும் நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு!
