மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் பல நிர்வாகங்களிலும் ஊழல் மலிந்துள்ளது. ஊழல் செய்ததாக முன்னாள் முதலமைச்சர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊழல் செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். அதிமுக பாஜக கூட்டணி தொடரக்கூடாது என்ற அடிப்படையிலேயே அண்ணாமலை செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் அண்ணாமலை கூறியிருக்கிறார். இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அவருடைய ஆட்சியையும் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை தான் நினைவுபடுத்துகிறது.
ஜெயலலிதா அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. உண்மையை உணராமல் மனம் போன போக்கில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை அண்ணாமலை வரும்காலங்களில் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
செல்வம்
“ரத்தத்தை கொட்டியாவது கலைஞருக்கு பேனா சிலை அமைப்போம்” – ஜெகத்ரட்சகன்
