மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் கலைஞருக்கு சிலை வைக்க அனுமதியளிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மு.க.அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 7ஆம் தேதி காலமானார். இதனையடுத்து திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், திமுகவில் தன்னை இணைக்க வேண்டுமென கலைஞரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். இதற்காக கடந்த 5ஆம் தேதியன்று கலைஞரின் நினைவிடம் நோக்கி பேரணியும் சென்றிருந்தார்.
இந்த நிலையில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதியளிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், “தமிழக முதல்வராக 5முறை பொறுப்பேற்றவரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், திமுகவை பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கட்டிக் காத்தவரும், பல்வேறு சோதனைகளைத் தாங்கி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றவரும், 10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவருமான கலைஞர் அவர்கள் இயற்கை எய்தியதை, உணர்வுள்ள உண்மைத் தொண்டர்களும், தமிழர்களும் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்றளவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

இத்தகு சிறப்பு மிக்க கலைஞர் அவர்களுக்கு, நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில், தலைவர் கலைஞர் அவர்களின் ‘வெண்கல சிலை’அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.,”
