பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த ஹரிஷ்-ரைஸா வில்சன் ஆகியோரை ரீல் காதலர்களாக திரையில் பார்த்ததைவிட, பிக் பாஸிலேயே ரியல் காதலர்களாக இருந்து பிரிந்து சென்ற ஆரவ்-ஓவியாவை பார்க்க ரசிகர்கள் எத்தனை ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பதை வெளிக்காட்டக்கூடிய படமாக ராஜ பீமா இருக்கும் என்கின்றனர்.
பிக்பாஸ் இரண்டாவது சீசனும் முடிந்துவிட்ட நிலையில், இப்போது தான் ஆரவ் நடித்துள்ள ராஜ பீமா திரைப்படம் முடிந்திருக்கிறது. படத்தில் பயன்படுத்தப்பட்ட யானை, ஷூட்டிங்குக்கு தடங்கலாக இருந்துவிடக்கூடாது என ஆரவ் அந்த யானையுடன் ஷூட்டிங்குக்கு முன்னதாகவே நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். காகிதத்தில் எழுதப்பட்ட கதைக்கு தேவையான அத்தனை திட்டமிடல்களும் இருந்தாலும், இயற்கையின் முன்னே யாரும் நிற்கமுடியாது என்பதை இந்தப் படத்தின் ஷூட்டிங் உணர்த்தியதாக, ராஜ பீமா படத்தின் இயக்குநர் நரேஷ் சம்பத் கூறியிருக்கிறார்.
ராஜ பீமா திரைப்படத்தின் மூலம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் உரசல்களையும், விதிமீறல்களையும் பேசியிருந்தாலும், கமெர்ஷியல் தேவைக்காக சிலவற்றை சேர்த்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது ஆரவ்-ஓவியா நடனமாடும் பாடல். கோடை விடுமுறையில் இந்தப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர்.�,