2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், தனது 3வது லீக் போட்டியில், நியூசிலாந்து அணி வங்கதேச அணியை நேற்று (அக்டோபர் 13) எதிர்கொண்டது.
இந்த போட்டியில், பேட்டிங் மற்றும் பவுலிங் என 2 பிரிவுகளிலும் மிரட்டிய நியூசிலாந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
சுமார் 9 மாதங்கள் காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றிருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், நேற்றைய போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
246 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு, 3வது இடத்தில் கமிறங்கிய கேன் வில்லியம்சன், துவக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடி, கம்-பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தினார்.
ஆனால், ஆட்டத்தின் 39வது ஓவரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. வில்லியம்சன் 78 ரன்களுடன் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் ரன் ஓட முயன்ற சமயத்தில், வங்கதேச வீரர் ஒருவர் ஸ்டம்பை நோக்கி வீசிய பந்து, எதிர்பாராத விதமாக வில்லியம்சனின் இடது கை கட்டை விரலில் பட்டது.
இதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டியில் இருந்து ஒய்வு பெற்ற கேன் வில்லியம்சன், களத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அவரது கையில் X-ray எடுத்துப் பார்த்ததில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது வில்லியம்சன் மற்றும் நியூசிலாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/BLACKCAPS/status/1713107505990242781
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்,
இந்த தொடரின் பிற்பாதியில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க வழிவகுக்கும் வண்ணம், கேன் வில்லியம்சன் அணியில் தொடர்வார் என தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு பேக்-அப் வீரராக டாம் பிளண்டல் இந்தியா செல்ல உள்ளதாகவும், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
”லியோவில் சம்பவம் இருக்கு”: லோகேஷ் கனகராஜ் வைத்த வேண்டுகோள்!