நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் ஜனவரி 13 அன்று நடைபெற்றது.
வழக்கமாக அதிமுக பொதுக்குழு நடத்துகிற அரங்கத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அரசியல் அரங்கில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் கடந்த பொதுக்குழு இதே வானகரத்தில் இன்னொரு சிறிய மண்டபத்தில் நடைபெற்றது. இந்தநிலையில், பொதுக்குழுவை மேற்கு தாம்பரத்தில் இருக்கும் ஒரு அரங்கத்தில் தான் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் வெள்ளச்சேதம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுவிட, அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் இடம் மாற்றப்பட்டு வானகரம் மண்டத்தில் நடந்திருக்கிறது. மிக விசாலமான அரங்கமான ஸ்ரீவாரு மண்டபத்தில், அரங்கத்தை தாண்டி வெளியேயும் நாம் தமிழர் நிர்வாகிகள் திரண்டனர்.
கூட்டம் தாங்க முடியாததால் ஸ்ரீவாரு மண்டபத்தின் உணவு அரங்கிலும் கட்சி நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டு, அங்கே எல்இடி திரை மூலம் அவர்கள் பொதுக்குழுவை கண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய பொதுக்குழு கூட்டத்தில், சுமார் 3,500 பேர் கலந்து கொண்டனர்.
சீமானின் நண்பரான களஞ்சியம் உள்ளிட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். சீமான் அரங்கத்திற்கு வந்த கொஞ்ச நேரத்தில், அவரது மனைவி கயல்விழியும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தார். “அண்ணி…அண்ணி” என அவரை நாம் தமிழர் நிர்வாகிகள் வரவேற்று கொண்டாடினர்.
சீமானைப்போலவே கயல்விழிக்கும் தனியாக பவுன்சர்கள் பாதுகாப்புக்காக வந்தனர். காலை 10.30 மணிக்கு நிர்வாகிகள் பேசத் தொடங்கினார்கள்.
மதிய உணவு நேரம் வந்தபோது கூட யாரும் சாப்பிடுவதற்கு எழுந்து செல்லாமல், கூட்டம் தொடர்ந்தது. நண்பகல் நேரம் ஆனதை உணர்ந்த சீமான், மேடையிலிருந்த நிர்வாகிகளை பார்த்து ”பசிக்குதா… பசிக்குதா” என்று கேட்டார். அப்போது நிர்வாகிகள் தரப்பில், ”அறிவுப்பசிதாண்ணே எடுக்குது” என்று சத்தமாக பதிலளித்தனர்.
ஒரு கட்டத்தில் உணவு நேரத்தை கடந்து 4.30 மணி வரை பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. உணவுக் கூடத்தில் இருந்த நிர்வாகிகள், அங்கிருந்து மாற்றப்பட்டு, உணவு மேஜைகள் அமைக்கப்பட்டன. அந்த மண்டபத்தில் அசைவ உணவு சாப்பிட அனுமதி இல்லாததால், மாலை 4.30 மணிக்கு நிர்வாகிகள் சைவ உணவு சாப்பிட்டனர்.
சீமான் பேசும்போது, ”வருகிற மக்களவைத் தேர்தலிலும் நாம் தனித்து நிற்கத்தான் போகிறோம். நாம் யாரோடும் கூட்டணி அமைக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு மாற்றே நாம் தான். ஒருவேளை நாம் ஒரு கூட்டணி அமைத்தால், விஜயகாந்தைப் போல நமது கட்சியின் வாக்குவங்கியும் மிகப்பெரியச் சரிவை சந்திக்கும்.
ஏற்கனவே மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நான் பேசியது போல, நாம் தமிழர் கட்சி ஒரு கோடி வாக்குகளைப் பெற வேண்டும். அதற்காக நாம் வேலை செய்ய வேண்டும். 40 தொகுதிகளில் நான்கையாவது நாம் ஜெயிக்க வேண்டும்.
உங்களது பிரதமர் வேட்பாளர் யார் என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்டேன், மோடியின் இந்த பத்து வருட ஆட்சியாக இருக்கட்டும், அதற்கு முன் இருந்த மன்மோகன் சிங்கின் பத்து வருட ஆட்சியாக இருக்கட்டும், இந்த 20 வருட ஆட்சியில் தமிழர்களுக்கு ஒரே ஒரு நன்மை நடந்திருக்கிறதா சொல்லுங்கள்? நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சி முக்கியமானத் தேவை. 2024,2026 தேர்தல்கள் நம் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் முக்கியமானவை” என்ற சீமான் தொடர்ந்து,
“இந்தி வேண்டாம் என நாம் ஏன் சொல்ல வேண்டும்? அதைவிட முக்கியமாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். இன்னொருத்தனின் தாய் மொழியை அழிப்பது நம் வேலை அல்ல. நம்முடைய தமிழை பாதுகாப்பதே நம் வேலை. திராவிடத்தை அழிப்பது நம் வேலை அல்ல, தமிழ்தேசியத்தை வளர்த்தெடுத்து வெற்றி பெற வைப்பதே நம் வேலை” என்றார் சீமான்.
கட்சி விவகாரங்கள் பற்றி இந்த பொதுக்குழுவில் பேசிய சீமான், ”இந்த கட்சியை நடத்துவதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நிகழ்ச்சியை நடத்துவதற்கும் பிச்சை எடுக்க வேண்டியதிருக்கிறது.
மாதம் மாதம் கட்சிக்காக 1000 பேர் ரூ.1000 தர வேண்டும் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் இப்போது வரை 208 பேர் தான் மாதம் ரூ.1000 தந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார் சீமான்.
மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்த இந்த பொதுக்குழுவில், கட்சியின் அமைப்பு ரீதியான விவகாரங்களை விவாதிக்கலாம் என்று எதிர்பார்த்து வந்த தொகுதிச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் பேச வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர்.
சீமானை மையமாக வைத்து நாம் தமிழர் கட்சி வளர்ந்துகொண்டிருப்பதை இந்தப் பொதுக்குழு எடுத்துக்காட்டியுள்ளது.
அதேநேரம் கட்சியின் உள்கட்டமைப்பு விவகாரங்களில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த பொதுக்குழுவில் எதிரொலிக்கின்றன.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீளிரா உங்கள் இதயத்தை தொடும்… தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் பெருமிதம்!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: ராமதாஸ் வலியுறுத்தல்!