வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் மற்றும் அவரது கணவர் இருவரும் இறந்தவர்கள் என காரணம் காட்டி வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 99.91% விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 99.27% பதிவேற்றம் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
SIR படிவங்களை பெற்ற வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை BLO அல்லது வாக்காளர் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் SIR செயல்பாடுகளில் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்துஜா ரமேஷ் மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் என குறிப்பிட்டு நீக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்துஜா ரமேஷ் தம்பதியினர் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர். இது நிர்வாகப் பிழை என ஒப்புக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீக்கப்பட்ட பெயர்கள் உடனடியாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வேட்பாளர் தம்பதியினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்ககள் உள்ள நிலையில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
