நோட்டு புத்தகம் பறிமுதல்: அலுவலருக்கு நோட்டீஸ்!

Published On:

| By Balaji

கரூரில் அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் படம் அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட சணப்பிரட்டி பகுதியில் கேசவன் என்பவரது வீட்டில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் படம் அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்கள் இருப்பதாக வந்த புகாரையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிமேகலை தலைமையிலான பறக்கும் படையினர் கேசவன் என்பவரது வீட்டில் கடந்த 5ஆம் தேதி இரவு சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.66,000 மதிப்பிலான 3,030 நோட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிலையில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி தட்சிணாமூர்த்தி, தேர்தல் அலுவலர் மணிமேகலைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தனிநபரின் வீட்டில் சோதனையிடும்போது, செலவினப் பார்வையாளர், வருமானத் துறையினருக்குத் தகவல் கொடுத்து, அவர்கள் முன்னிலையில்தான் சோதனை நடைபெற்றிருக்க வேண்டும். இதுதான் விதிமுறை. இதை பின்பற்றாமல், தன்னிச்சையாக ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து நோட்டு புத்தகங்களை பறிமுதல் செய்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.

தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக, தங்கள் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்தை 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

**வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share