தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கைக்கு, தமிழக காவல் துறை டிஜிபி பதிலளித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 24) டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கடந்த இரண்டு நாட்களில் 12 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் 22-08-2022 அன்று 7 கொலைகளும், 23-08-2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை.
மேலும், பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது.
2022-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021-ல் இதே காலக்கட்டத்தில் 925 கொலைகளும், 2019-ம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது.
ஆகவே, முந்தைய 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று பட்டியல் போட்டிருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.
ஜெ.பிரகாஷ்
36 மணி நேரத்தில் 15 கொலைகள்: எங்கே போகிறது தமிழகம்? எடப்பாடி கேள்வி!
