திமுக ஆட்சியில் திமுக பிரமுகரை விருத்தாசலத்தில் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சி தமிழ்நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் கோயில் அமைந்துள்ள மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்றத் தலைவராக நீதிராஜா உள்ளார். இவருடைய அப்பா முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ தியாகராஜன்.
நீதிராஜாவுக்கு மூன்று சகோதரர்கள். இவர்களுக்கும் அதே ஊராட்சியைச் சேர்ந்த ராஜசேகர் சகோதரர்களுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீராத பகை இருந்து வந்துள்ளது,
ஊராட்சி மன்ற தலைவர் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி நீதிராஜா தலித் மக்கள் ஆதரவோடு, ராஜசேகர் சகோதரர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுமார் நான்கு ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டெடுத்ததாகவும், இதனால் ராஜசேகர் சகோதரர்களுக்கும், நீதிராஜா சகோதரர்களுக்கும் பகை தீவிரமானது என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை நீதிராஜா சகோதரர் இளையராஜா காரில் வயலுக்கு சென்றபோது அவரை ராஜசேகர் தரப்பு துப்பாக்கியால் சுட்டது.
இளையராஜா வயலுக்கு வருவதை தெரிந்துகொண்டு ராஜசேகர் மகன் ராஜா ஆடலரசும் அவரது நண்பர் விஜயகுமாரும் துப்பாக்கியுடன் வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் இளையராஜா வயலுக்கு வந்ததும், இருவரும் சேர்ந்து சுட்டதில் ஒரு குண்டு இளையராஜாவின் இடுப்பு பகுதியிலும், மூன்று குண்டுகள் காரிலும் பாய்ந்தன.
இந்த வழக்கை டெல்டா டீம் மற்றும் விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளரும் விசாரணை அதிகாரியுமான முருகேசன் விசாரித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த விஜயகுமார்(ஏ1), ராஜசேகர் மகன் ராஜா ஆடலரசு(ஏ2), மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சூர்யா(ஏ3), மணவாளநல்லூரைச் சேர்ந்த வெங்கடேசன்(ஏ4), வெங்கடம்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்வரன்(ஏ5), சரவணன் (ஏ6) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (குற்ற எண் 435/2023)
இதைத்தொடர்ந்து, ராஜா ஆடலரசு மற்றும் விஜயகுமார் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், ‘சென்னை குரோம்பேட்டையில் ஜொமோட்டோ நிறுவனத்தில் வேலை செய்யும் முகமது யூனுஸ் மூலமாக துப்பாக்கிகள் வாங்கினோம்.
ஒரு துப்பாக்கி ரூ.1.50 லட்சம் என மூன்று மாத இடைவெளியில் இரண்டு துப்பாக்கிகள் வாங்கினோம். இதில் ஒவ்வொரு துப்பாக்கியிலும் மூன்று புல்லெட்கள் நிரப்ப முடியும்.
இதைவைத்து கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை இளையராஜாவை முடிக்க திட்டமிட்டு, இருவரும் ஆளுக்கு இரண்டு ரவுண்டு அவரை நோக்கி சுட்டோம். அதில் ஒரு புல்லட் இளையராஜா இடுப்பில் பாய்ந்தது’ என்று வாக்குமூலம் கொடுத்தனர்.
இந்த வாக்குமூலத்தின் படி இந்த 6 பேரோடு சேர்த்து கூடுதலாக நான்கு பேர் என மொத்தம் 10 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
அதுபோன்று விசாரணை அதிகாரி துப்பாக்கி வாங்கிக் கொடுத்த முகமது யூனுஸை சென்னை சென்று பிடித்து வந்து கடலூர் சிறையில் அடைத்தார்.
ஆனால், “அவரிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும் முகமது யூனஸுக்கு எப்படி துப்பாக்கி கிடைக்கிறது? யாரிடம் இருந்து அவர் வாங்கினார்? என்று அடுத்தக்கட்ட விசாரணைக்கு செல்லாமல் அவசரமாக சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுவரை கஸ்டடியில் எடுக்கவும் முயற்சி செய்யவில்லை” என்கிறார்கள் காவல் துறை தரப்பில்.
மேலும் அவர்கள், “தமிழகத்தில் முக்கிய ரவுடியாக வலம் வருபவர் சிதம்பரம் சுரேந்தர். இவர் மீது பல கொலை வழக்குகள், வெடிகுண்டு வழக்குகள் உள்ளன.
மறைந்த ரவுடி சந்திரனின் வலது கரமாக இருந்தவர். இவரிடம் கோடிக்கணக்கான பணமும் சொத்துகளும் உள்ளன,
இவரை இதுவரையில் பத்திரமாக பாதுகாத்து வருவது போலீஸ் டீம்தான், ஏன் பிடிக்க வில்லை என்று உயர் அதிகாரிகள் கேட்டால், ‘போலீஸ் சோர்சு’ என்று ஒத்த வார்த்தையைச் சொல்லி விடுவார்கள். இந்த சுரேந்தர், ராஜா ஆடலரசுக்கு உறவுகாரர். அந்த வகையில் இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் இவரது பங்கும் இருக்கலாம் என்ற சந்தேகம் பலமாக இருக்கிறது.
ஆனால் டெல்டா டீம் சுரேந்தரை விசாரித்து விட்டோம் அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று உயர் அதிகாரிகளிடம் சொல்லிவிட்டனர்.
இளையராஜாவை சுட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மொத்தம் 10 பேர். இதில் ஒருவரான மங்கையர்கரசியை கைது செய்யாமல் விட்டுவிட்டனர். மிச்சமுள்ள 9 பேரை கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் தலித், ஒருவர் நாயுடு, ஒருவர் இஸ்லாமியர், மற்றவர்கள் வன்னியர்கள். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் கை, கால் பாத்ரூமில் வழுக்கி விழுந்து முறிவு ஏற்பட்டுள்ளது” என்கின்றனர்.
“இளையராஜா வழக்கில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி யூஸ் அண்ட் த்ரோ போன்றது. ஒரு முறை பயன்படுத்தி விட்டால் அடுத்தமுறை மற்ற புல்லட்களை போட முடியாது. இதுபோன்ற துப்பாக்கிகள் பீகார், அசாம், போன்ற வட மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு தமிழகத்திற்கு பல நூறு துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன.
விருத்தாசலத்தில் பிடிக்கப்பட்ட இரண்டு 9 எம்எம் வகையான துப்பாக்கிகள் வாங்கப்பட்டது எப்படி?, யார் சப்ளை செய்தது?, எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? என்று தீவிரமாக விசாரித்தால் தமிழகத்தில் பரவியிருக்கும் வடமாநில கள்ளத்துப்பாக்கிகளை அள்ளி எடுக்கலாம். இதனால் பல குற்றச்சம்பவங்களை தடுக்கலாம்.
சிதம்பரம் ரவுடி சுரேந்தரிடம் துப்பாக்கிகள் தொடர்பான மெட்டீரியல் இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய சில போலீஸ் அதிகாரிகளே அவருடன் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள்” என்கிறார்கள் சில காவல்துறை அதிகாரிகளே.
கடலூரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ் நாடெங்கும் உள்ள கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்புவோரின் கோரிக்கையாக உள்ளது.
வணங்காமுடி