வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், நோய் தடுப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நோய் தொற்று ஆபாயமும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்டோபர் 25) வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர், மேட்டுக்குப்பம் சாலை, பாரதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பருவமழைக்கு முன்பாகவும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். அந்தவகையில் தான் பருவ மழை காலங்களில் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளோ, நோய் பாதிப்புகளோ இல்லாத நிலை என்பது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
கடந்த 20 நாட்களுக்கு முன்னாள் சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு தலைமையில் முக்கிய சேவை துறைகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒரு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்புகள் வழங்கப்பட்டன.
அதன்படி, அந்தந்த மாவட்டத்தில் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ முகாம்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மருத்துவ முகாம்கள் 10,000 என்கின்ற வகையில் நடத்தப்பட்டு, ஏதாவது கிராமத்தில் 3க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமேயானால் அங்கு உடனடியாக மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தி ஒரு ஆண்டிற்குள்ளாகவே 27,000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
இப்போது தான் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. நேற்று வரை 17 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. பருவமழை கூடுதலாக பெய்யத் தொடங்கியவுடன் எவ்வளவு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்கின்ற தகவல் பத்திரிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
மக்களைத்தேடி மருத்துவம் எனும் திட்டத்திற்கு செப்டம்பர் 25 ஆம் தேதி அமெரிக்கா ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் united Nation intergrency Task Force Award என்கின்ற உலகளாவிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிற்கு கிடைத்திருக்கின்ற பெருமை. மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் இதுவரை பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 2,48,68,185 பேர், தொடர் சேவை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 4,68,03,041 பேர்” என தெரிவித்துள்ளார்.
