பிரசாந்த் கிஷோர் அழுத்தம்: சீமான் மீது வழக்கு!

Published On:

| By Jegadeesh

புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் இன்று (மார்ச் 12 ) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக வெளி மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களை சித்தரித்து தமிழ்நாட்டுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பாஜக வினர் வதந்தி பரப்பினர்.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில். ”வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பிகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகளின் குழுக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வும் நடத்தியது.

ADVERTISEMENT

அதில், “பிகாரிலிருந்து வந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி இங்கு இருப்பதாகத் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பரவும் போலி வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம்.

தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்” என்று ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறினார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் வழக்கு பாய்ந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது கஞ்சா வழக்கு, பலாத்கார வழக்கு உள்ளிட்டவை போடப்படும்;

தமிழ்நாட்டில் இருந்து தனி ரயிலில் வட இந்திய தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்து சீமான் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்து, பிகாரை சேர்ந்தவரும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அரசியல் வியூக வல்லுநராக பணியாற்றியவருமான பிரசாந்த் கிஷோர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக ஏற்கனவே சீமான் மீது போடப்பட்ட வழக்குகளில் கூடுதல் பிரிவுகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதால் அதற்குரிய பிரிவுகளும் சீமான் மீதான முந்தைய வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

இங்கே பலரும் இதுகுறித்து கோரிக்கை எழுப்பிய நிலையில், பிகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் கோரிக்கைக்குப் பிறகே சீமான் மீது வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா – சம்மர் ஸ்பெஷல்: வற்றல், வடாகம் போடப்போறீங்களா… ஒரு நிமிஷம்!

குஷ்பூ போலவே…பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஸ்வாதி மாலிவால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share