டிட்வா புயல் தாக்கத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தலைநகர் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தாலும் தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்துள்ளது. தற்போது அது வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்திற்கு மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வரும். பின்னர் படிப்படியாக குறைந்த அழுத்தப்பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பணிக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக வடசென்னை பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.
சென்னையில் அண்ணா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் ஜமாலியா பிரதான சாலை பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை நீர் தேங்கி உள்ளது. அப்பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கோடம்பாக்கம் அஜிஸ் நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அப்பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதேபோல் நுங்கப்பாங்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகளில் தொடர்ச்சியாக மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் மழையின் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கெண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
