“ஒரு பள்ளத்தைத் தோண்டிவிட்டு, அதை மூடாமல் விட்டது யார் தவறு? அதற்கு ஒரு உயிர் பலியாக வேண்டுமா?” – இதுதான் இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் கேள்வியாக இருக்கிறது. நொய்டாவில் மென்பொறியாளர் யுவராஜ் மேத்தா (27) உயிரிழந்த சம்பவம், வெறும் விபத்தாக இல்லாமல், அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் நடந்த படுகொலையாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தற்போது முக்கியக் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
பில்டர் கைது & புதிய வழக்குகள்: கடும் பனிமூட்டம் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகள் இல்லாத காரணத்தால், தனது காருடன் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த யுவராஜ் மேத்தாவின் மரண வழக்கில், ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘எம்.இசட் விஸ்டவுன் பிளானர்ஸ்’ (MZ Wiztown Planners) இயக்குனர் அபய் குமார் (Abhay Kumar) கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு நிறுவனமான ‘லோட்டஸ் கிரீன்ஸ்’ (Lotus Greens) நிறுவனத்தின் 5 அதிகாரிகள் மீதும் தற்போது புதிதாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. “பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டது” உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மாற்றம் & SIT விசாரணை: பொதுமக்களின் கடும் கோபத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நொய்டா ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) லோகேஷ் எம். அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தை ஆய்வு செய்த சிறப்பு விசாரணைக் குழு (SIT), “விபத்து நடந்த இடத்தில் ஏன் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கவில்லை?” என்று நொய்டா அதிகாரிகளைக் கேள்விகளால் துளைத்து வருகிறது.
90 நிமிட நரகம்: இந்தச் சம்பவத்தில் மனதை உலுக்கும் விஷயம், யுவராஜ் மேத்தாவின் கடைசி 90 நிமிடங்கள். காருடன் பள்ளத்தில் விழுந்த அவர், உடனடியாகத் தன் தந்தைக்கு போன் செய்து, “அப்பா, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறியுள்ளார். ஆனால், மீட்புப் படையினர் (NDRF/SDRF) சம்பவ இடத்திற்கு வந்தும், போதிய வெளிச்சம் மற்றும் கருவிகள் இல்லாததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. “என் கண் முன்னே என் மகன் சிறுகச் சிறுக மூழ்கி இறந்தான்,” என்று அவரின் தந்தை ராஜ்குமார் மேத்தா கதறியது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
தொடரும் ஆவேசம்: “ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லிக்கொள்ளும் நொய்டாவில், ஒரு பள்ளத்தை மூடத் துப்பில்லை என்றால் என்ன வளர்ச்சி?” என்று சமூக வலைதளங்களில் #JusticeForYuvraj என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், “இது பேராசையின் கலாச்சாரம் (Culture of Greed) உருவாக்கிய பலி,” என்று கடுமையாகச் சாடியுள்ளனர்.
யார் தவறு செய்திருந்தாலும், ஒரு துடிப்பான இளைஞனின் உயிர் போனது போனதுதான். இனிமேலாவது சாலைகளில் இருக்கும் ‘மரணக் குழிகள்’ மூடப்படுமா என்பதே மக்களின் ஒரே எதிர்பார்ப்பு.
