பொங்கல் பரிசில் கரும்பை வழங்க வலியுறுத்தி கடலூர் அருகே 6 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பூச்சி மருந்து பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் காலத்தில் தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் பன்னீர் கரும்பு வழங்குவது வழக்கம்.
இதனால் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி சத்திரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திடீரென பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு வழங்கப்படாது என அரசு அறிவித்தது. இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் குள்ளஞ்சாவடி சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் கடலூர் வடலூர் இடையே உள்ள குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் கையில் பன்னீர் கரும்பை ஏந்தியும், சிலர் பூச்சி மருந்து பாட்டில்களை கையில் வைத்து தாங்கள் தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று மதுரை மாவட்டம் மேலூர் திருச்சி நான்கு வழி சாலையிலும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிக்கப்படாததை கண்டித்து கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
பொங்கலுக்கு ரூ.5000 வழங்குக: எடப்பாடி பழனிசாமி
ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம்: மாநில அரசு உரிமை பற்றி விளக்கம்!