பசும்பொன்னுக்கு வருகை தரும் பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டதாக வெளியான உத்தரவு நகல் போலியானது என்று மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் மற்றும் 60வது குருபூஜை விழா முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கடந்த 1ம் தேதி வெளியிட்டதாக ஒரு உத்தரவு கடிதம் இணையத்தில் வைரலானது.
அதில், தேவர்ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் நபர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களை நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பணியில் காவலர்களும் நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த உத்தரவு கடிதம் போலியானது என்று ராமநாதபுரம் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ”இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதில் பங்கேற்பதற்காக அதிக அளவில் முக்கிய பிரமுகர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு வருவர்.
அப்படி வரும்போது குறிப்பிட்ட இடத்தில் காலணிகளை விட்டுச்செல்வதும், பின்னர் திரும்ப எடுக்க முடியாத நிலையில் அவர்கள் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இதனை கருத்தில் கொண்டு பிரமுகர்களின் நலன்கருதி இந்தாண்டு காலணிகளை ஒரு இடத்தில் பத்திரமாக விட்டுச்சென்று தேவர் நினைவிடத்திற்கு சென்று வழிபட்டு, பின்னர் வெளியில் வந்து அந்த காலணிகளை திரும்ப எடுத்துச் செல்லும் வகையில் (Sliper Stand) காலணிகள் கவுண்டர் அமைத்து கண்காணித்திட திட்டமிடப்பட்டது.
ஆனால் அத்தியாவசிய பணியின் காரணமாக இந்தாண்டு இந்த நடைமுறை பின்பற்றவில்லை.
இதற்கிடையே காலணிகளை பாதுகாக்கும் பணிக்கு தனியாக காவலர்கள் நியமித்து பணி மேற்கொள்ள உத்தரவிட்டதுபோல் உத்தரவு கடித நகல் ஒன்றை சிலர் வெளியிட்டு உள்ளனர். அது மாதிரியான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா