தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பஸ்கள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என அதன் உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பஸ் உரிமையாளர்களின் பல்வேறு சங்கங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ஆம்னி பஸ்கள், கேரளா போக்குவரத்துத் துறையினரால் சிறை பிடிக்கப்பட்டன. அம்மாநிலத்தில் ரூ70 லட்சத்துக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டது. கர்நாடகாவிலும் இதே போல 60-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு ரூ1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், இரட்டை வரி மற்றும் கடுமையான அபராதங்களை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். இதனால் கடந்த 7-ந் தேதி இரவு முதல் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கவில்லை. இதனையடுத்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இன்று நவம்பர் 10-ந் தேதி மாலை முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் இடையே ஆம்னி பேருந்துகளை இயக்குவதை நிறுத்துகிறோம். இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு சுமூக தீர்வை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
