திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிசம்பர் 16) விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று (டிசம்பர் 16) துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் பெரும் மழை பெய்ததால் நூலகத்தில் எங்கேயாவது தண்ணீர் கசிந்துள்ளதா, நூலகம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என நூலகத்தை நேரில் ஆய்வு செய்தேன்.
இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை என்று அங்கிருக்ககூடிய நூலகர் சொன்னார். இதுவரை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 நபர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். சராசரியாக நாள்தோறும் 2,500 பேர் பயன்படுத்துகிறார்கள்” என்றார்.
மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது” என்று மேம்பால பணிகள் குறித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலுவிடம், இப்போது இருக்கக்கூடிய பாலங்கள் திடீரென சேதமடைகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “ஆறுகளில் கட்டக்கூடிய பாலத்துக்கும், மேல்மட்ட பாலத்துக்கும் வித்தியாசம் உள்ளது. ஆறுகளில் தண்ணீர் வரக்கூடிய அளவை பொறுத்து மேம்பாலம் கட்டப்படும்.
பொதுவாக இதுதொடர்பான விவரங்களை நீர்வளத்துறை பொறியாளரிடம் இருந்து கணக்கு வாங்குவோம். அவர்கள், இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் போகும் என்று கணக்கு கொடுப்பார்கள். அதை வைத்துதான் ஆற்றுபாலம் கட்டுவதற்கு டிசைன் போடப்படும்.
சில நேரங்களில் 52,000 கன அடி தண்ணீர் போகும் என்ற கணக்கில் பாலம் கட்டுவோம். ஆனால் 2 லட்சம் கன அடி தண்ணீர் போனால் பாலம் விரிசல் விடுவதற்கும், அடித்துச் செல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.
எனவே 2.25 லட்சம் கன அடி நீர் செல்லும் என்று எல்லா பாலத்துக்கும் கணக்கிட முடியாது. அப்படி செய்தால் திட்ட மதிப்பீடு 4 மடங்கு கூடுதலாகும். அதற்கான பொருளாதாரம் இல்லை. அதுபோன்று எல்லா பாலங்களும் சேதம் ஆகாது” என்று பதிலளித்தார்.
அவரிடம் ஆதவ் அர்ஜுனா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் கலந்து கொண்டால் கூட்டணியில் பிரச்சினை வரும்.

அதனால் திருமாவளவன் அதில் பங்கேற்கக் கூடாது என்று நீங்கள் சொன்னதாக ஆதவ் அர்ஜூனா சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “ நான் அப்படி ஏதும் அழுத்தம் கொடுக்கவில்லை.
2001 ஆம் ஆண்டு மங்களூரு தொகுதியில் வெற்றி பெற்று திருமாவளவன் சட்டமன்றத்துக்கு வந்த போது, அவரது அருகில் இருக்கும் சீட்டில்தான் நான் அமர்ந்திருப்பேன்.
அப்போது முதல் நட்பு என்பதை தாண்டி சகோதரத்துடன் பழகக் கூடியவர்.
எதிர்முகாமில் இருந்த காலத்தில்கூட திருமாவளவன் என்னுடன் நட்புடன் பழகி வருபவர்.
எனக்கும், திமுகவுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார். அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர். எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.
2001ல் இருந்து அவருடன் பழகிக்கொண்டிருக்கிறேன். அதற்காக ஆதவ் அர்ஜுனாவிடம் நான் அனுமதியா வாங்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கூட்டணிக் கட்சிகளை திமுக மதிப்பதில்லை… வேல்முருகன் பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா ஆதரவு!