பிரபலமான பார்டர் பரோட்டா கடையில் சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்திக்கு அக்கடையின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்
தென்காசி மாவட்டத்தில் மிகப்பிரபலமான சுற்றுலாத்தலம் குற்றாலம். இங்குள்ள அருவியில் குளிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவது வழக்கம். அதன்படி இங்கு வருபவர்கள் அருகே உள்ள செங்கோட்டை பார்டர் ரஹ்மத் பரோட்டா கடைக்கு சென்று உண்ணாமல் செல்லமாட்டார்கள்.
இந்நிலையில் பார்டர் பரோட்டா கடையில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு சில நாட்களுக்கு முன்னர் புகார்கள் சென்றன.
இதனையடுத்து நேற்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைக்காக சமைக்கப்படும் குடோனிலும் ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால் அதற்கு சாவி இல்லை என்று கூறப்பட்டதால் அதற்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னர் சாவி எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து சீலை அகற்றி சோதனையில் ஈடுப்பட்டனர்.
மேலும் சோதனையில் அங்கிருந்த கெட்டு போன 4 மூட்டை மிளகாய் வத்தல் மற்றும் 200 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர் என்றும், கடைக்கு சீல் வைத்தனர் என்றும் செய்திகள் வெளியானது.
முற்றிலும் பொய்யான தகவல்
இந்நிலையில் பார்டர் பரோட்டா கடை உரிமையாளர் ராஜ முகமது இன்று பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர், ”உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று ஆய்வுக்கு வந்தனர். அப்போது கிச்சன் சுத்தமாக இல்லை என்பது போன்ற சிறு சிறு குறைகளை தெரிவித்தனர். அதனை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தோம்.
இதற்கிடையே அதிகாரிகளின் சோதனையில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. அது முற்றிலும் பொய்யான தகவல்.
இந்த பகுதியில் பிரபலமான இந்த உணவகம் குறித்து வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தவறான சிகிச்சை : இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு
Comments are closed.