கனடா நாட்டில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சம்பந்தம் இல்லை என்று கனடா அரசு இன்று(நவம்பர் 22) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் சில சீக்கியர்கள் ‘காலிஸ்தான்’ என்ற பெயரில், தனி நாடு வேண்டும் என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். அதற்காக அவர்கள் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டார்.
காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவான சீக்கியர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். குறிப்பாக கனடாவில். அப்படிப்பட்ட ஒருவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023 வருடம் ஜூன் 18ஆம் தேதி கனடா நாட்டின் சர்ரே நகரத்தில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்திற்கும் சில முக்கிய இந்திய அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டிருடோ கூறிவந்தார். இதனால் இந்தியா கனடா இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் இந்திய அரசாங்கம் கனடா நாட்டு தூதர்களையும், கனடா அரசாங்கம் இந்தியா நாட்டுத் தூதர்களையும் வெளியேற்றியது.
இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த ‘தி குளோப் அண்ட் மெயில்’ என்ற பத்திரிக்கை ஹர்திப் சிங் நிஜ்ஜாரை கொல்வதற்காகப் போடப்பட்ட திட்டம் பற்றி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு முன்பே தெரியும் என்று கூறியிருந்தது.இதை இந்திய அரசாங்கம் மறுத்து இருந்தது.
இந்தச் சூழலில் தான், மோடி, தோவல், ஜெய்சங்கர் ஆகியோர் நிஜ்ஜார் கொலை சம்பவத்துடன் இணைக்கும் ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று கனடா அரசு இன்று கூறியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அதானியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லையா? 1997 ஒப்பந்தம் சொல்வது என்ன?
