பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை டிசம்பர் 23-ந் தேதி தமிழகத்தில் முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்மையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், துணை தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர்கள் ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர்களான பியூஷ் கோயல் உள்ளிட்ட மூவரும் சென்னையில் பாஜக கூட்டணி கட்சிகளான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமாகாவின் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோரை நாளை சந்திக்கின்றனர்.
சென்னை கிண்டி தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த சந்திப்புக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் திரும்பக் கூடும் என கூறப்படுகிற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
