சாமியார் மீது வழக்கு வேண்டாம்: உதயநிதி அறிக்கை!

Published On:

| By christopher

no hate and case against samiyar acharya

தனது தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது, அவரின்‌ படத்தைக்‌ கொளுத்துவது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்களை திமுகவினர் அறவே தவிர்க்குமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7)அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.

மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் உதயநிதி தலைக்கு விலை வைத்த அயோத்தியா சாமியார் மீதும், உதயநிதியின் பேச்சை குறிப்பிட்டு இனப்படுகொலைக்கு தூண்டியதாக கருத்து பதிவிட்ட பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா மீதும் தமிழகத்தில் திமுகவினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக  ஈடுபட வேண்டாம் என தி.மு.க. தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அதில், வரும் டிசம்பர்‌ 7-ஆம்‌ தேதி சேலத்தில்‌ நடைபெற உள்ள திமுக இளைஞர்‌ அணியின்‌ 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத்‌ தயார்படுத்தும்‌ வகையில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற நிகழ்வுகளை குறிப்பிட்டிருந்தார்.

காற்றில்‌ கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்‌!

தொடர்ந்து உதயநிதி அந்த அறிக்கையில், “இந்த நேரத்தில்‌ சில விஷயங்களை நம்‌ கழகத்தினருக்குத்‌ தெளிவுபடுத்த வேண்டியது என்‌ கடமை. மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ ’தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்‌ கலைஞர்கள்‌ சங்கம்‌’ கடந்த 1-ஆம்‌ தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில்‌ பங்கேற்று உரையாற்றினேன்‌.

“கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின்‌. நலனுக்காகச்‌ செய்த திட்டங்கள்‌ என்ன?’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும்‌ ஓரணியில்‌ திரண்டு. நின்று, நிராயுதபாணியாக நிற்கும்‌ ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக்‌ கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில்‌, த.மு.எ.௧.ச மாநாட்டில்‌ நான்‌ பேசிய பேச்சை, “இனப்படுகொலை செய்யத்‌ தூண்டினேன்‌!’ என்று திரித்து அதையே மக்களிடம்‌ இருந்து தங்களைக்‌. காத்துக்கொள்ளும்‌ ஆயுதமாக நினைத்து காற்றில்‌ கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்‌ பா.ஜ.க. தலைவர்கள்‌.

இதில்‌ ஆச்சர்யம்‌ என்னவென்றால்‌, அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின்‌ அமைச்சர்கள்‌, பா.ஜ.க. ஆளும்‌ மாநில முதலமைச்சர்கள்‌ என யார் யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என்‌ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்கின்றனர்‌. நியாயமாகப்‌ பார்த்தால்‌, மதிப்புக்குரிய பொறுப்பில்‌ இருந்துகொண்டு அவதூறு பரப்பும்‌ இவர்கள்‌ மீது நான்தான்‌ கிரிமினல்‌ வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத்‌ தொடுக்க வேண்டும்‌. ஆனால்‌, இவர்களுக்குப்‌ பிழைப்பே இதுதான்‌, இதைவிட்டால்‌, பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால்‌, ’பிழைத்துப்‌ போகட்டும்‌’ என்று விட்டுவிட்டேன்‌.

நானும்‌ ஆன்மிகவாதிதான்‌!

தந்தை பெரியாரிடம்‌ இருந்து வந்த பேரறிஞர்‌ அண்ணாவால்‌ நிறுவப்பட்ட தி.மு.கழகத்தின்‌ இரண்டு கோடி தொண்டர்களில்‌ நானும்‌ ஒருவன்‌. நாங்கள்‌ எந்த மதத்துக்கும்‌ எதிரி இல்லை என்பதை அனைவரும்‌ அறிவார்கள்‌. மதங்களைப்‌ பற்றி அண்ணா அவர்கள்‌ கூறியது இன்றும்‌ பொருத்தமாக இருப்பதால்‌ அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌. “எப்போது ஒரு மதம்‌ மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும்‌ ஆன்மிகவாதிதான்‌. எப்போது ஒரு மதம்‌ சாதியின்‌ பெயரால்‌ மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும்‌ அடிமைத்தனத்தையும்‌ கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும்‌ முதல்‌ ஆள்‌ நானாகத்தான்‌ இருப்பேன்‌” என்றார்‌ அண்ணா. பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌! என்பதை கற்பிக்கும்‌ மதங்கள்‌ அனைத்தையும்‌ நாங்கள்‌ மதிக்கிறோம்‌.

ஆனால்‌, இவை எதையும்‌ புரிந்துகொள்ள விரும்பாமல்‌, வரும்‌ நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌. வெறும்‌ அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட்‌ கோவை பார்க்கும்போது ஒரு பக்கம்‌ பரிதாபமாகவும்‌ இருக்கிறது.

வடிவேலுவுடன் போட்டி போடுகிறார் மோடி

‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா! என திரைப்பட நடிகர்‌ அண்ணன்‌ வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம்‌ போட்டி போடும்‌ அளவுக்கு மோடி அவர்கள்‌ கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார்‌. இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச்‌ செய்வது, குடிசைகளை மறைத்து சுவர்‌ எழுப்புவது, புதிய நாடாளுமன்றக்‌ கட்டடம்‌ கட்டுவது, அங்கு செங்கோல்‌ நடுவது, நாட்டின்‌ பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில்‌ நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின்‌ 23-ஆம்‌ புலிகேசி! கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்‌.

திரையில்‌ வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில்‌ இவர்களை மக்களின்‌ வாக்குகளைப்‌ பெற எந்தளவுக்கும்‌ சென்று, இவர்கள்‌ நாடக அரசியலைச்‌ செய்வார்கள்‌ என்பது இதிலிருந்து தெரிகிறது.

நான்‌ இதை நகைச்சுவைக்காக மட்டும்‌ சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின்‌ வாழ்வை உயர்த்தும்‌ ‘புதுமைப்பெண்‌’ திட்டம்‌ போன்றோ, முதலமைச்சரின்‌ காலைச்‌ சிற்றுண்டி திட்டம்‌ போன்றோ, கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத்‌ திட்டம்‌ கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம்‌ இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர்‌ நூற்றாண்டு நூலகத்தைப்‌ போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?

அதிமுக மீது குற்றச்சாட்டு

“சனாதனம்‌ என்றால்‌ என்ன?” என்பதை வீட்டினுள்‌ பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும்‌ புத்தகங்களில்‌ இருந்து தேடிக்கொண்டிருக்கும்‌ எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை- கொள்ளை வழக்குகளிலும்‌, ஊழல்‌ வழக்குகளில்‌ இருந்தும்‌ தப்பிக்க, நீங்கள்‌ ஆட்டுத்‌ தாடிக்குப்பின்‌ நீண்டநாள்‌ ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள்‌ காணாமல்‌ போகும்போது, நீங்கள்‌ என்ன ஆகப்போகிறீர்கள்‌ என்பதையும்‌ நினைவில்‌ கொள்ளுங்கள்‌.

“என்ன வாய்‌ மட்டும்‌ வேலை செய்யுது! என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள்‌ பணி என நினைக்கும்‌ சிலர்‌ நான்‌ பேசாததைப்‌ பேசியதாகத்‌ திரிக்கும்‌ அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப்‌ பிழைப்பு நடத்தி வருகின்றனர்‌. அவர்களின்‌ பிழைப்பில்‌ நான்‌ மண்‌ அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்‌.

நாம்‌ எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில்‌ அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப்‌ பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே, அப்போது அ.தி.மு.க.வும்‌ பா.ஜ.க.வும்‌ என்ன செய்தன? மணி அடித்தபடியும்‌, விளக்கு பிடித்தபடியும்‌ கொரோனா கிருமியை ஒழிக்கப்‌ போராடிக்‌ கொண்டு இருந்தன.

இன்று நாம்‌ ஆளுங்கட்சி. இன்றும்‌ நாம்‌ கலைஞரின்‌ நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில்‌ கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம்‌. அ.தி.மு.க வோ ஆடலும்‌ பாடலும்‌ பின்னணியில்‌, புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக்‌ கால்கள்‌ கிடைக்காதா? ஊர்ந்து போக ஏதாவது பர்னிச்சர்‌ கிடைக்காதா? எனத்‌ தேடிக்‌ கொண்டிருக்கிறது.

திசை திருப்ப சனாதன சர்ச்சை!

ஒன்றிய பிரதமர்‌ மோடியோ கொரோனா நிதியாகத்‌ திரட்டிய “பி.எம்‌. கேர்ஸ்க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம்‌ இல்லை என்றபடி 7.5 லட்சம்‌ கோடி ரூபாய்‌ என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப்‌ பதிலளிக்காமல்‌, ஊரில்‌ இருந்தால்‌, மணிப்பூர்‌ பற்றிக்‌ கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர்‌ அதானியை அழைத்துக்கொண்டு ஊர்‌ ஊராகச்‌ சுற்றிக்கொண்டு இருக்கிறார்‌. உண்மையைச்‌ சொல்வது என்றால்‌, மக்களின்‌ அறியாமைதான்‌ இவர்களின்‌ நாடக அரசியலுக்கான மூலதனம்‌.

மணிப்பூர்‌ கலவரத்தைத்‌ தூண்டிவிட்டு 250-க்கும்‌ மேற்பட்டோர்‌ படுகொலை செய்யப்படக்‌ காரணமாக இருந்தது, 7.5 லட்சம்‌ கோடி ரூபாய்‌ ஊழல்‌… போன்றவற்றைத்‌ திசை திருப்பத்தான்‌ மோடி அண்ட்‌ கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின்‌. கைகளில்‌ தான்‌ மொத்தமாக சிக்கியுள்ளதால்‌, ’ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம்‌ எஜமான்‌’, பாரதம்னு மாத்துறிங்களா… மாத்திடுங்க ஒனர்‌’ என்று மோடியின்‌ நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்‌ எடப்பாடி பழனிச்சாமி.

சாமியார் மீது வழக்கு வேண்டாம்!

சாமியார்களுக்குத்தான்‌ இந்தக்‌ காலத்தில்‌ அதிக விளம்பரம்‌ தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார்‌ இடையில்‌ புகுந்து என்‌ தலைக்கு 10 கோடி ரூபாய்‌ விலை வைத்துள்ளார்‌. என்‌ தலையைவிட ’முற்றும்‌ துறந்தவரிடம்‌ எப்படி 10 கோடி’ என்பதுதான்‌ எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர்‌ என்‌ மீது நாட்டின்‌ பல்வேறு காவல்‌ நிலையங்களிலும்‌, மாண்புமிகு நீதிமன்றங்களிலும்‌ புகார்‌ அளித்து வருவதாகத்‌ தெரிகிறது.

இந்த நிலையில்‌, ‘கொலை மிரட்டல்‌ விடுத்த அந்தச்‌ சாமியாரை கைது செய்ய வேண்டும்‌! என்று கோரி நம்‌ கழகத்தினர்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு காவல்‌ நிலையங்களில்‌ புகார்‌ அளித்து வருவதாகவும்‌, அந்தச்‌ சாமியாரின்‌ உருவ பொம்மையை எரிப்பது, அவரின்‌ படத்தைக்‌ கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில்‌ ஈடுபடுவதாகவும்‌ தெரிகிறது.

நாம்‌ பிறருக்கு நாகரிகம்‌ கற்றுத்‌ தருபவர்கள்‌. நம்‌ தலைவர்கள்‌ நம்மை அப்படித்தான்‌ வளர்த்தெடுத்துள்ளனர்‌. எனவே, அதுபோன்ற காரியங்களை நம்‌ இயக்கத்‌ தோழர்கள்‌ அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. தவிர, நமக்கு இயக்கப்‌ பணி, மக்கள்‌ பணி என எண்ணிலடங்கா பணிகள்‌ காத்திருக்கின்றன.

முத்தமிழறிஞர்‌ கலைஞரின்‌ நூற்றாண்டை முன்னிட்டு அரசின்‌ சார்பிலும்‌, கழகத்தின்‌. சார்பிலும்‌ பல பணிகளை நம்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌-கழகத்‌ தலைவர்‌ அவர்கள்‌ நமக்கு வழங்கியுள்ளார்கள்‌. இளைஞர்‌ அணியின்‌ 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள்‌, நாடாளுமன்றத்‌ தேர்தல்‌ பணிகள்‌… என ஏராளமான பணிகள்‌ நமக்கு முன்‌ உள்ளன.

இவ்வளவு வேலைகள்‌ இருக்கும்போது சாமியாரின்‌ மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது… போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில்‌ நம்‌ கழகத்தினர்‌. எவரும்‌ ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்‌. என்‌ மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத்‌ தலைவர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலும்‌, தலைமைக்‌ கழகத்தின்‌ ஆலோசனையைப்‌ பெற்று சட்டத்துறையின்‌ உதவியுடன்‌ சட்டப்படி எதிர்கொள்வேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப்‌ பகிர்ந்த தோழமை கட்சியின்‌ தலைவர்களுக்கும்‌, மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும்‌ என்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. மேலும்‌, ’சனாதன தர்மம்‌ எதை வலியுறுத்துகிறது, அதில்‌ அப்படி என்னதான்‌ சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில்‌ ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கும்‌, அதை ஒருங்கிணைத்த த.மு.எ.௧.ச தோழர்களுக்கும்‌ இந்த நேரத்தில்‌ நான்‌ நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்‌. அம்மாநாட்டுக்கு நான்‌ செல்ல காரணமாக இருந்த அண்ணன்‌ புதுகை பூபாளம்‌ பிரகதீஸ்வரன்‌ அவர்களுக்கு என்‌ அன்பு.

தந்தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌, இனமான பேராசிரியர்‌ புகழ்‌ ஓங்கட்டும்‌ தொடர்ந்து அவர்களின்‌ கொள்கை வழியில்‌ நடக்க உறுதியேற்போம்‌.” என்று உதயநிதி ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

சந்திரமுகியாக ஜோதிகா – கங்கனா ஒப்பீடு: லாரன்ஸ் பதில்!

ஜி20 மாநாடு விருந்து: டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share