சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 11) பொதுநல வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முழு ஊரடங்கு தொடர்பாகத் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார் .
சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ள அவர், கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு அதற்கான பரிந்துரைகளையும் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னையிலிருந்து வெளியில் செல்வதற்கு இ பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என்று வெளியாகும் செய்திகள் வதந்தி என்றும் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக பாஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்றின் ஆபத்து குறித்துத் தெரிந்திருந்தும் சென்னையில் மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் வெளியே வந்து செல்வதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டறிந்த நீதிபதிகள் வைரஸ் தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
**-கவிபிரியா**
