அரசுப் பேருந்தில் ஏறி ஓசி டிக்கெட் வேண்டாம் என்று கூறிய மூதாட்டி, அவரை வேண்டுமென்றே தகராறு செய்ய வைத்த அதிமுக பிரமுகர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் இலவசப் பயணத் திட்டம் தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி `ஓசி’ என்று கூறியது பெண்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை அரசுப் பேருந்தில் பயணித்த குரும்பாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள் என்கிற மூதாட்டி, நடத்துனரிடம் ஓசி டிக்கெட் வேண்டாம் காசு வாங்கிக்கொள் என்று கூறிய வீடியோ வைரலானது.
ஆனால் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ, அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் மூதாட்டியை அழைத்துச் சென்று,
நடத்துனரிடம் பிரச்னை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்ததாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பிரித்திவிராஜூம், “ஆம் நான்தான் பிரித்திவிராஜ். எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இதுகுறித்து கோவை மதுக்கரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வேண்டுமென்றே திமுக மீது களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு மூதாட்டியை தகராறு செய்ய வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டதாக புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

போலீஸ் விசாரணையில் அது உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டதால் மூதாட்டி துளசியம்மாள், அதிமுக ஐடி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக அவதூறு பரப்புதல், பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தகராறு செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரித்திராஜ் என் மீது புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், ஊருக்கு நடுவில் தான் இருக்கிறேன் முடிந்தால் கைது செய்து பாருங்கள் என்றும் மிரட்டும் வகையில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த மூதாட்டியும் அதிமுகவின் பல கூட்டங்களில் கலந்துகொண்ட புகைப்படங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கலை.ரா
