no electricity at stadium hosting India vs Australia T20
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று (டிசம்பர் 1) இரவு 7 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த டி20 தொடரை பொறுத்தவரை முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், 3-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளன.
இதனால் இன்று நடைபெறும் 4-வது போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் 3-1 என இந்த தொடரை கைப்பற்றி விடும்.
ஒருவேளை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் 2-2 என இரண்டு அணிகளும் தொடரை வெல்ல சமமான வாய்ப்பு கிடைக்கும். அதனால் கடைசி போட்டியே வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் ஒன்றாக மாறும்.
எனவே தான் இன்றைய ஆட்டம் தொடரை யார் கைப்பற்றுவார்கள்? என்பதை தீர்மானிக்க கூடிய ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் 4-வது போட்டி நடைபெறும் வீர் நாராயண் சிங் மைதானம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வசதி இல்லாமல் தத்தளிப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்துக்கான கரண்ட் பில் கட்டப்படாமல் நிலுவையில் உள்ளதாம்.
https://twitter.com/ipl2024updates/status/1730494131926183943
இதனால் நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி வெறுத்து போன மின்சார வாரியம், கடந்த 2018-ம் ஆண்டு மைதானத்துக்கான மின்சாரத்தை துண்டித்து விட்டது.
கிட்டத்தட்ட 3.16 கோடி ரூபாய் மின்சார வாரியத்துக்கு பாக்கி இருக்கிறதாம். மைதானம் கட்டப்பட்ட பின்னர் அதன் பராமரிப்பு பணிகள் பொதுத்துறை நிறுவனத்திடம் (PWD) ஒப்படைக்கப்பட்டு விட்டது.
எனவே பொதுத்துறை நிறுவனம் தான் இதற்கு காரணம் என்று விளையாட்டு துறையும், விளையாட்டு துறை தான் காரணம் என்று பொதுத்துறை நிறுவனமும் ஒன்றையொன்று மாற்றி, மாற்றி குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பியும் மின்சார வாரியத்தால் இன்னும் நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க இயலவில்லை.
2018-க்கு பின்னர் இங்கு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு மூன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதேபோல இன்றும் மின்சாரத்துக்கு மாற்றாக ஜெனரேட்டர்களை வைத்தும், மின்சார வாரியத்திடம் தற்காலிக இணைப்பு பெற்றும் இந்த 4-வது டி20 போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவாம்.
இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருணேஷ் சிங் பரிஹார் ,”சர்வதேச போட்டிகளை நடத்துவதில் இங்கு சிக்கல் இருக்கிறது. மாற்று ஏற்பாடாக தற்காலிக இணைப்பு பெற்று போட்டிகளை நடத்துகின்றனர். மின்சார கட்டணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு நிலுவையில் உள்ளது என தெரியவில்லை. ஆனால் CSCS என்ற பெயரில் இன்று நடக்கும் போட்டிக்கு தற்காலிக இணைப்பு எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உலகத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியமான இந்தியாவின் பிசிசிஐ-க்கே இப்படி ஒரு பரிதாப நிலையா? என சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு கட்டாய ஓய்வு!
சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!
no electricity at stadium hosting India vs Australia T20