மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் வெல்லுமா?

Published On:

| By Kavi

No confidence motion against Modi government

மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இதுவரை பிரதமர் நாடாளுமன்றத்துக்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்காத நிலையில், கடந்த ஜூலை 26ஆம் தேதி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகாய் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனை விவாதத்துக்கு ஏற்றுக்கொள்வதாகச் சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.

அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு எப்போது இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும் என்ற தேதி அறிவிக்கப்படும் என்றும் ஓம் பிர்லா கூறினார்.

இந்நிலையில் இரு நாள் பயணமாக எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகஸ்ட் 8 முதல் 10ஆம் தேதி வரை விவாதிக்கப்படும்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் பதிலளிப்பார் என்று நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி அரசு மீது கொண்டு வரப்பட்ட இரண்டாவது நம்பிக்கை இல்லா தீர்மானம் இதுவாகும். ஏற்கனவே மக்களவையில் 2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு எதிராக 325 எம்பிக்கள் வாக்களித்தனர். ஆதரவாக 126 பேர் மட்டுமே வாக்களித்ததால் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றது.

தற்போது மக்களவையில் 543 எம்.பி.க்கள் உள்ளனர். 5 எம்.பி.இடங்கள் காலியாக இருக்கிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 330 உறுப்பினர்களும், எதிர்க்கட்சி கூட்டணியில் 140 உறுப்பினர்களும் உள்ளனர். இரு கட்சிகளையும் சாராமல் 60 உறுப்பினர்கள் உள்ளனர்.

“இந்தச்சூழலில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வேளை தோல்வியடையும் என்றாலும், மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைப் பேச வைப்பதன் மூலம் கருத்துப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

பிரியா

ஓபிஎஸ் – டிடிவி… ஆர்ப்பாட்ட நாடகம்: ஜெயக்குமார் கண்டனம்!

மணிப்பூர் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்?: நேரில் ஆஜராக உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share