ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதுமில்லை, யாருக்கும் ஆதரவும் தரப்போவது இல்லை என்று பா.ம.க. அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூடி விவாதித்தது.
கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.
அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை.
அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம்’’ என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.
இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்று விவாதிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இன்று மாலை பாமக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர ஓபிஎஸ் திட்டமிட்டிருந்த நிலையில், யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
“விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் ஓபிஎஸ்”-ஜெயக்குமார் விமர்சனம்!