கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை இன்று முடிவடைந்துவிட்டதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராகத் தயார் என்றும் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த், தோ்தல் தலைமைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகன் ஆகியோரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
தவெக முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்தது முதல் நேற்றைய விசாரணையில் என்ன நடந்தது என்பது வரை மின்னம்பலத்தில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தோம்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், “சிபிஐ தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும், அந்த நிகழ்ச்சி தொடர்பான அனுமதி மற்றும் இதர விவரங்களுக்கும் தகுந்த விளக்கங்களையும் ஆவணங்களையும் கொடுத்துள்ளோம்.
உள்ளே என்ன நடந்தது என்று இப்போது சொல்ல முடியாது. இந்த விபத்து நடக்காமல் தடுக்க காவல்துறை தவறிய இடங்கள், அவர்களின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் பிரேதப் பரிசோதனையில் நடந்த குளறுபடிகள் குறித்த ஆதாரங்களையும், வீடியோக்களையும் சிபிஐ-யிடம் சமர்ப்பித்துள்ளோம்.
இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்கத் தயார். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக தயார்” என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் யூகங்களுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும், அனைத்தையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
