நிரவ் மோடி சொத்துகள் பறிமுதல்?

Published On:

| By Balaji

14,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ள நீதிபதி, பொருளாதாரத் தலைமறைவு குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்வது குறித்தும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்குச் சொந்தமான நிறுவனம் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், அந்த வங்கியின் அதிகாரிகள் உதவியுடன் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து கடன் உத்தரவாதக் கடிதம் பெற்று பல்வேறு வங்கிகளில் 14,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது.

ADVERTISEMENT

இது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு நிரவ் மோடி வெளிநாடு தப்பிவிட்டார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் அவர் பிடிபட்டதை அடுத்து, அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை நாடு கடத்தி கொண்டு வர இந்தியா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், கீழ் நீதிமன்றம் மற்றும் இங்கிலாந்து உள்துறை மந்திரி ஆகியோரின் நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் நிரவ் மோடி மேல்முறையீடு செய்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பொருளாதார தலைமறைவு குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. அமலாக்கத்துறை வேண்டுகோளை ஏற்று நிரவ் மோடியைக் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிநாடு தப்பி ஓடிய பொருளாதார தலைமறைவு குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

தற்போது அவர் நாடு திரும்ப மறுத்து வருவதால், அவரது சொத்துகளை பொருளாதாரத் தலைமறைவு குற்றவாளி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (மே 14) மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி வி.சி.பார்டே முன்னிலையில் நடந்தது. அப்போது, ஜூன் 11ஆம் தேதியன்று தனது முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக நிரவ் மோடிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நிரவ் மோடிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றையும் நீதிபதி அனுப்ப உத்தரவிட்டார். அதில், ‘ஜூன் 11ஆம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால், அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள உங்களது சொத்துகளை பொருளாதார தலைமறைவு குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் ஏன் பறிமுதல் செய்யக்கூடாது?’ என்று கேட்டுள்ளார்.

இதே நோட்டீஸை நிரவ் மோடியின் மனைவி அமி, சகோதரி புர்வி, மைத்துனர் மயங்க் மேத்தா ஆகியோருக்கும் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share