திட்டக்குடி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, எதிரே வந்த கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் என்ற இடத்தில் வந்த போது அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைகுலைந்த பேருந்து சாலை தடுப்புகளை தாண்டி மறுதிசையில் எதிரே வந்த 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 கார்களும் உருக்குலைந்தது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த வந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்ற விபரம் குறித்தும் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு பேருந்து மற்றும் கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 7பேர் உயிரிழந்தனர் என்று செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும் பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பாக விரைந்து உரிய நிவாரணமும், உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
