தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் (NHAI) இணைந்து, ஜியோவின் 4G மற்றும் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, விபத்து நடக்கும் பகுதிகள், திடீரென வரும் கால்நடைகள், மூடுபனி நிறைந்த இடங்கள் மற்றும் அவசர வழித்தடங்கள் போன்ற ஆபத்தான பகுதிகளை நெருங்கும் பயணிகளுக்கு மொபைல் போன்களில் எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் ஒரு தொலைத்தொடர்பு அடிப்படையிலான பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த முயற்சி நெடுஞ்சாலைப் பயனர்களுக்கு சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் வேகத்தைக் குறைத்து, ஓட்டும் முறையை முன்கூட்டியே மாற்றியமைக்க முடியும். இந்த எச்சரிக்கைகள் SMS, வாட்ஸ் அப் மற்றும் உயர் முன்னுரிமை அழைப்புகள் மூலம் நெடுஞ்சாலைப் பயனர்களுக்கு அனுப்பப்படும். இந்த அமைப்பு NHAIயின் டிஜிட்டல் தளங்களான ‘Rajmargyatra’ மொபைல் செயலி மற்றும் அவசர உதவி எண் 1033 உடன் படிப்படியாக ஒருங்கிணைக்கப்படும்.
இந்த தானியங்கி அமைப்பு தேசிய நெடுஞ்சாலைகளில் அல்லது அதற்கு அருகில் உள்ள அனைத்து ஜியோ மொபைல் பயனர்களுக்கும் வேலை செய்யும். ஆபத்தான பகுதிக்குள் நுழைவதற்கு முன்பே நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு இது முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்கும். இந்த தீர்வு, ஏற்கனவே உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களைப் பயன்படுத்தும். இதனால், சாலைகளில் கூடுதல் உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. மேலும், இதை விரைவாக செயல்படுத்த முடியும்.
இந்த ஒப்பந்தம் நம் நாட்டில் 500 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட ஜியோவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும். NHAI இது போன்ற நடவடிக்கைகளை மற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடனும் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டம், பயணிகளுக்கு ஆபத்துகளைப் பற்றி முன்கூட்டியே தெரிவித்து விபத்துகளைத் தடுக்க உதவும். இதன் மூலம் நெடுஞ்சாலைப் பயணங்கள் பாதுகாப்பானதாகவும், மன அமைதியுடனும் அமையும்.
ஜியோவின் பரந்த நெட்வொர்க், இந்த எச்சரிக்கை அமைப்பை நாட்டின் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் திறம்பட செயல்பட வைக்கும். இது ஒரு புதுமையான மற்றும் பயனுள்ள திட்டமாகும்.
