என்எல்சி தேர்தலா? இடைத்தேர்தலா? – ஸ்டாலின் அனுப்பிய அமைச்சர்கள்!

Published On:

| By vanangamudi

நெய்வேலி என்எல்சி தொழிற்சங்க தேர்தல் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நெய்வேலி என்எல்சி-யில் சுமார் 12,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ, விசிக, பாமக, தவெக உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. Neyveli nlc election stalin

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிற்சங்க தேர்தலில் 2,352 வாக்குகள் பெற்று திமுக தொழிற்சங்கமான தொமுச முதலிடமும், அதிமுக தொழிற்சங்கமான அதொமுச 1,697 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இந்தநிலையில், இந்த ஆண்டு தொழிற்சங்க தேர்தல், ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 6,500 தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சிஐடியு, திராவிட தொழிலாளர் சங்கம், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், மஸ்தூர் சங்கம், பாட்டாளி மக்கள் சங்கம், தொமுச ஆகிய ஆறு சங்கங்கள் மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் சிபிஎம் தவிர்த்து காங்கிரஸ், விசிக, தவாக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொமுசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவின் அதொமுசவும், பாஜகவின் மஸ்தூர் சங்கமும் இந்த தேர்தலில் தனித்து களம் காண்கின்றனர்.

தொழிற்சங்க தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் தொழிற்சங்கங்களை தான் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். அதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற தொமுச, அதொமுச, சிஐடியு ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

திமுக தரப்பில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்எல்ஏ சபா ராஜேந்திரன், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், செம்மலை, எம்.சி.சம்பத், சிபிஎம் தரப்பில் சு.வெங்கடேசன் எம்.பி, மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும்கட்சியான திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சி.வே.கணேசன், நெய்வேலி தொகுதி எம்எம்ஏ சபா ராஜேந்திரன், கிழக்கு மாசெவும் வேளாண்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் ஒன்றிணைந்து பலமான வைட்டமின் பி-யுடன் களத்தில் குதித்துள்ளனர். அதிமுகவும் வைட்டமின் பி-யை நம்பியே தேர்தலில் இறங்கியுள்ளது என்கிறார்கள் தொழிலாளர்கள் மத்தியில்.

தொழிலாளர் சங்க தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “தொழிலாளர் நலனுக்கு ஆதரவாக போராட்டத்தில் முதலாக நிற்பது சிஐடியு தான். 2016-ல் சிஐடியு வெற்றி பெற்றபோது ஊழல் இல்லாமல் சொசைட்டி நேர்மையாக நடத்தப்பட்டது. ஊதிய ஒப்பந்தம் நடந்தபோது தொழிலாளர்களுக்கு அதிகமாக பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இப்போது மீண்டும் புதிய ஊதிய ஒப்பந்தம் வருகிறது. எங்களை வெற்றி பெற வைத்தால், நாங்கள் நிச்சயமாக நிர்வாகத்திற்கு அடி பணியாமல் தொழிலாளர் பக்கம் நின்று போராடி வெற்றி பெறுவோம்” என்று பிரச்சாரம் செய்துள்ளார்.

தொமுசவுக்கு வாக்கு கேட்டு சென்ற, அமைச்சர் கணேசன், தொகுதி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் இருவரும், “தொழிலாளர் நலனுக்காக 40 வருடமாக போராடி வருவது தொமுச தான். 7 வருடத்திற்கு ஒருமுறை இருந்த பதவி உயர்வை மூன்று வருடத்திற்கு ஒருமுறை என்று பெற்றுக்கொடுத்தது தொமுச” என வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த தேர்தல் தொடர்பாக, சிஐடியு தலைவர் திரு அரசுவிடம் பேசினோம், “நாங்கள், பணத்தை நம்பி போட்டியிடவில்லை. தொழிலாளர்களை நம்பி தான் போட்டியிடுகிறோம். 2016 தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து 4,500 தொழிலாளர்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தனர். பணம் கொடுக்காமல் தான் வெற்றி பெற்றோம்.

நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை பெற்றுக்கொடுத்தோம். புதிய ஊதிய ஒப்பந்தத்தின்போது, அதிகமாக ஊதியம் பெற்றுக்கொடுத்தோம்.

சொசைட்டியை எந்தவிதமான முறைகேடும் இல்லாமல், நடத்தி வந்தோம். இதையெல்லாம் இப்போதுள்ள தொழிலாளர்கள் உணருவார்கள். என்எல்சி-யை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்யும்போதெல்லாம், சிஐடியு தான் கடுமையான போராட்டங்களை நடத்தி தடுத்து வருகிறது.

இந்த தேர்தலில் கூட தொமுசவும் அதொமுசவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதையும் மீறி நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.

தொமுச நகர செயலாளரும் முன்னாள் தொமுச தலைவருமான குருநாதன், “என்எல்சியை தனியாருக்கு விற்க முயன்றபோது போராடியது தொமுச தான். நிலம் கொடுத்த வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பும் நிவாரணமும் பெற்றுக்கொடுத்தது தொமுச தான். ஒவ்வொரு புதிய ஊதிய ஒப்பந்தம் நடைபெறும் போதும் தொமுச நிர்வாகிகள் தான் அதிகமாக சலுகைகளை பெற்றுக்கொடுத்தனர்.

இதனைப் போன்ற தொமுச செய்த சாதனையும் இனி செய்யப்போகும் சாதனையும் சொல்லி வாக்குகள் சேகரித்து வருகிறோம். அதனால் நாங்கள் பெருமளவில் தொழிலாளர் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும்” என்றார்.

அதொமுச பொதுச்செயலாளர் வெற்றி, “என்எல்சி தேர்தலில் வெற்றி பெற மேலிட பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செம்மலை, எம்.சி.சம்பத், எம்.எல்.ஏ-க்கள் அருண் மொழித்தேவன், கே.ஏ.பாண்டியன் உள்பட 10 பேரை நியமித்துள்ளார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அவர்கள் அன்றாடம் தொழிலாளர்களை சந்தித்து அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றனர். என்எல்சி பங்குகள் 5 சதவிகிதத்தை தனியாருக்கு விற்க முயன்றபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தனியாருக்கு விற்கக்கூடாது தமிழக அரசுக்கு தான் விற்க வேண்டும் என்று பங்குகளை வாங்கினார்.

அதேபோல, வாரிசுகளுக்கான வேலைகளை நாங்கள் தான் உறுதிப்படுத்தினோம். இன்னும் பல சலுகைகளை வெற்றிப் பெற்று கொடுத்தது அதொமுச தான்” என்றார்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால், ஆளும் கட்சியாக இருந்து இரண்டாம் இடத்திற்கோ அல்லது மிக குறைவான வாக்குகளை பெற்றுவிடக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் இந்த தேர்தலை மிகவும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அமைச்சர்களை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனால் அமைச்சர் கணேசனும் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சபா ராஜேந்திரனும் சட்டமன்றத்தில் பங்கேற்றுவிட்டு மதியமே நெய்வேலிக்கு புறப்பட்டு விட்டனர். அதேபோல, அதிமுக பிரமுகர்களும் நெய்வேலியில் குவிந்துள்ளனர்.

இந்தநிலையில், இன்றிலிருந்து பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது என்கிறார்கள் தொழிலாளர்கள் வட்டாரத்தில். இந்த தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்ய திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் 5 கோடி பணம் புழங்குவதாக சொல்கிறார்கள் என்எல்சி அதிகாரிகள். இடைத்தேர்தலுக்கு சற்றும் குறைவில்லாத பரபரப்புடன் நெய்வேலி என்எல்சி தேர்தல் களம் அனல் பறக்கிறது. Neyveli nlc election stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share