ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்துள்ளார். newly wed navy officer attack in pagalham
ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தை சேர்ந்தவர் வினய் நர்வால். பி.டெக் பட்டதாரியான இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்படையில் பணியில் சேர்ந்தார்.
தற்போது கொச்சியில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி தான் திருமண வரவேற்பு நடந்தது.
இவருடைய மனைவி ஹிமான்சி. குருகிராமைச் சேர்ந்தவர். இருவரையும் குடும்பத்தினரும் நண்பர்களும் காஷ்மீர் அனுப்பி வைத்தனர்.

இவர்கள் முதலில் சுவிட்சர்லாந்து செல்ல ஆசைப்பட்டனர். ஆனால் குறுகிய காலத்தில் விசா கிடைக்காததால் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் காஷ்மீருக்கு கடந்த 21 ஆம் தேதி சென்றனர்.
காஷ்மீரில் தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பி ஊருக்கு செல்லும்போது மே 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவிருந்தார் லெப்டினன்ட் வினய்.
அதற்குள் இப்படி ஒரு கொடூரமும் சோகமும் நடந்துவிட்டது.
காஷ்மீர் மாநிலம் பஹல்கம் தாக்குதலைத் தொடர்ந்து இணையத்தில் இறந்து கிடக்கும் கணவர் அருகே மனைவி ஒருவர் சோகத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.

அந்தப் புகைப்படம் லெப்டினன்ட் வினய் நர்வால் மற்றும் ஹிமான்சி உடையது தான்.
அதுபோன்று வீடியோ ஒன்றும் வைரலானது. அதில் ஹிமான்சி, “நான் பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் கணவர் அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு நபர் வந்து அவரை சுட்டு விட்டார்” என்று கூறியது பதிவாகியிருந்தது.
தற்போது, வினய் நர்வால் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல குடும்பத்தினரும் அதிகாரிகளும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வினய் நர்வாலின் குடும்பத்தினருக்கு இந்திய கடற்படை ஆறுதல் தெரிவித்துள்ளது. “இந்த கோழைத்தனமான தாக்குதலில் வினய் நர்வால் உயிரிழந்தது கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி மற்றும் அனைத்து கடற்படை வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ”என்று கூறியுள்ளது.

வினய் நர்வால் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது குறித்து அவரது தாத்தா ஹவாசிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தக் கோழைத்தனமான செயலை செய்தவனை பிடித்து அவனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் பேரன் சுடப்படவில்லை என்றால் அவன் இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகளையாவது கொன்றிருப்பான். அவன் இறப்பிற்கு பழித்தீர்க்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இன்று (ஏப்ரல் 23) காலை வினய் நர்வால் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்த உள்ளூர் எம்எல்ஏ ஜக் மோகன் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தீவிரவாதிகளின் இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. தீவிரவாதிகள் ஒவ்வொருவராக குறி வைக்கப்பட்டு பழி தீர்க்கப்பட வேண்டும். பிரதமர் மோடி சவுதி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு வந்துள்ளார். அவரும் ஸ்ரீநகருக்கு செல்லவுள்ளார்” என்று கூறியுள்ளார்.
திருமணம் முடிந்து ஆறே நாளில் புது மாப்பிள்ளையான லெப்டினன்ட் வினய் நர்வால் கொலை செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. newly wed navy officer attack in pagalham