புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கு தொடர்பான அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னையும் இணைக்கக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக அரசு புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.
இதனை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது.
மேலும் முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
அந்த அரசாணையை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் 2018-ஆம் ஆண்டு தலைமை செயலக கட்டட முறைகேடு தொடர்பாக பொதுத்துறைக்கு புகார் அளித்தாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசின் மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, “அரசியல் நோக்கத்திற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறையால் எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஜெயவர்தன் தரப்பில், “அரசியல் என்பது எனது தொழில் அல்ல. மருத்துவர் என்ற அடிப்படையில் புகார் அளித்தேன்” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜெயவர்தன் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க கோரி தமிழக அரசுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
செல்வம்
உதயநிதியின் பேச்சு… மக்களை திசை திருப்பும் செயல் : ஈபிஎஸ்
அயோத்தி சாமியாரின் பேச்சு வன்முறையல்ல: செல்லூர் ராஜூ
மீனவ குடும்பங்களுக்கு ரூ.4.10 கோடி நிவாரணம்!
“உதயநிதியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” – ஜெயக்குமார்
Comments are closed.