விலை உயர்ந்த பரிசுகளை மட்டுமல்ல, இனி நீங்கள் உங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு பரஸ்பர நிதியையும் பரிசாகக் கொடுக்கலாம்.
இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (SEBI) இப்போது பரஸ்பர நிதி (mutual fund) யூனிட்களைப் பரிசாக வழங்க அனுமதித்துள்ளது. இதன் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு காலப்போக்கில் மதிப்பு கூடும் பரிசுகளை வழங்கலாம். இந்த முடிவு குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் நண்பர்களுக்கு நீண்ட கால நிதிப் பாதுகாப்பை வழங்கும் ஒரு வாய்ப்பாகும். இந்த புதிய விதிமுறைகள் எப்படி செயல்படும், யாருக்குப் பரிசாக வழங்கலாம், மற்றும் வரி விதிப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.
யார் வேண்டுமானாலும் KYC விதிமுறைகளுக்கு உட்பட்ட பரஸ்பர நிதி கணக்கு வைத்திருந்தால், தங்கள் குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் போன்றவர்களுக்கு பரஸ்பர நிதி யூனிட்களைப் பரிசாக வழங்கலாம். அதேபோல், மற்றவர்களிடமிருந்தும் பரஸ்பர நிதியை பரிசாகப் பெறலாம். இந்தப் பரிமாற்றம் கொடுப்பவரின் கணக்கிலிருந்து நேரடியாக பெறுபவரின் கணக்கிற்கு மாற்றப்படும். இந்த பரிமாற்றத்தை CAMS அல்லது KFintech இணையதளங்கள் மூலம் செய்யலாம்.
பெறுபவர் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதேபோல், பரிசாக வழங்கப்படும் யூனிட்களின் அசல் செலவு மற்றும் வைத்திருந்த காலமும் அப்படியே பெறுபவருக்கு மாற்றப்படும். இதற்கான வரி விதிப்புகளைப் பொறுத்தவரை, பரிசாக வழங்கும் நபருக்கு எந்த வரியும் கிடையாது. ஆனால், பரிசைப் பெறுபவர் குடும்ப உறுப்பினரிடமிருந்து பெற்றால் அவருக்கும் வரி விலக்கு உண்டு. வேறு யாரிடமிருந்தாவது பரிசாகப் பெற்றால், ஆண்டுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் பரிசுத் தொகை இருந்தால் வரி விதிக்கப்படும். பின்னர், அந்த யூனிட்களை விற்கும்போது பெறுபவர் மூலதன ஆதாய வரி (capital gains tax) விதிப்புகளின்படி வரி செலுத்த வேண்டும்.
இந்த புதிய விதிமுறை நிதிப் பாதுகாப்பை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும். உதாரணமாக, ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக பரஸ்பர நிதியில் முதலீடு செய்து அதை பரிசாக வழங்கலாம். குழந்தை வளர வளர அந்த முதலீடும் வளரும். இது ஒரு நல்ல சேமிப்பு மற்றும் முதலீட்டு முறையாகும். இந்த மாற்றங்கள் பரஸ்பர நிதி முதலீட்டை மேலும் எளிமையாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
