கடலூரில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணி உதிரி பாகங்களுக்கான உற்பத்தி தொழில் பூங்கா 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். new industrial park at kurinjipadi – mkstalin
கடலூருக்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சிதம்பரம் அருகே லால்புரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் திருவுருவ சிலை மற்றும் நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தனது சிறப்புரையில், திமுக கூட்டணித் தலைவர்களின் ஒற்றுமை மற்றும் இளைய பெருமாளின் சமூக போராட்ட வரலாற்றை நினைவுக்கூர்ந்து பாராட்டி பேசினார்.
கடைசியாக அவர், “இவ்வளவு பேசிவிட்டு எதுவும் அறிவிக்காமல் நான் சென்றால் அமைச்சர்கள் பன்னீர் செல்வமும், கணேசனும் என்னை விடமாட்டார்கள்.
அதன்படி, கடலூர் குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் வாழும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் குறிஞ்சிபாடி அருகே கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணி உதிரி பாகங்களுக்கான உற்பத்தி தொழில் பூங்கா 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்” என அறிவித்தார்.
இதனை மேடையில் இருந்த அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் என அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.
