நாடாளுமன்றத்தில் 140க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு அடுத்தடுத்து மசோதாக்களை எந்தவித எதிர்ப்பும் இன்றி தாக்கல் செய்து வருகிறது. New Criminal Bills passed
அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றிற்கு பதிலாக ’பாரதிய நியாய சன்ஹிதா’, ’பாரதியா நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா’ மற்றும் ’பாரதிய சாக்ஷ மசோதா’ ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 12-ம்தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் மீது மக்களவையில் கடந்த 2 நாட்களாக விவாதம் நடைபெற்று வந்தது.
ஆனால் நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபாட்டில், அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியதால் இதுவரை 143 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நீதியை நிலைநிறுத்தும்!
இந்த பெரிய எதிர்ப்புகள் இன்றி நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இதுவரை 158 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களில் உள்ள ஒவ்வொரு புள்ளி, கமாவையும் நான் தனிப்பட்ட முறையில் சரிபார்த்துள்ளேன்.
தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள் தண்டிக்கும் நோக்கில் இயற்றப்பட்ட ஆங்கிலேய ஆட்சிக்கால மனோபாவத்தை பிரதிபலிப்பவை. அவை தண்டிப்பதை மட்டுமே அதன் நோக்கமாக உள்ளதே தவிர, நீதியை நிலைநாட்டுவது நோக்கமாக இல்லை.
ஆனால் தற்போதைய புதிய மசோதாக்கள் இந்திய சிந்தனையின் அடிப்படையிலான நீதிமுறையை நிலைநிறுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன.
கும்பலால் தாக்கப்பட்டு நிகழும் படுகொலைக்கான தண்டனை குறித்து காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிதம்பரம் என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். கும்பல் படுகொலைகளுக்கு மரண தண்டனை விதிக்க புதிய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதம்பரத்துக்கு பா.ஜ.க வின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாது.” என்று அமித் ஷா பேசியிருந்தார்.
அதன்பின்னர் புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எதிர்ப்புகள் இன்றி நிறைவேறும் மசோதாக்கள்!
தொடர்ந்து, அவசரநிலை ஏற்பட்டால், தகவல் தொடர்பு சேவைகளை மத்திய, மாநில அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மசோதா, ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாய அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வயது வரம்பை உயர்த்தும் மசோதா, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாகப் பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரைக் குழுவில் இடம்பெறச் செய்யும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாக்களை எந்தவித எதிர்ப்பும் இன்றி பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.
அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளன!
இந்த நிலையில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரிட்டிஷ் ’காலனித்துவ’ குற்றவியல் சட்டங்களை பாஜக அரசாங்கம் உண்மையில் தூக்கி எறிந்துவிட்டதா? என்றால் இல்லை என்பதே உண்மை.
இந்திய தண்டனைச் சட்டத்தில் 90-95 சதவீதம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 95 சதவீதம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்தில் 99 சதவீதம் என்ற விகிதத்தில் அப்படியே நகலெடுத்து புதிய மூன்று மசோதாக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை யாராவது மறுக்கவோ அல்லது விவாதிக்கவோ முடியுமா?
உண்மையில், உண்மையான IPC மற்றும் சாட்சியச் சட்டத்தை உருவாக்கிய மெக்காலே மற்றும் ஃபிட்ஸ் ஸ்டீபன் ஆகியோரை அரசாங்கம் மீண்டும் அழியாததாக ஆக்கியுள்ளது.
இதனால் சட்டங்களை மாற்றுவதற்கும், மறுவரைவு செய்வதற்கும் கிடைத்த வாய்ப்பையும் பாஜக அரசு வீணடித்துள்ளது” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன!
மேலும் அவர், “உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் மூலம் காலனித்துவ முத்திரைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உண்மை வேறு.
1. தேசத்துரோகத்திற்கான எஃப்.ஐ.ஆர் பதிவு உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.
2) ஐபிசி 377வது பிரிவு நீக்கப்பட்டு, ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
3) விபச்சாரத்தை ஆண்களுக்கு தண்டனைக்குரிய குற்றமாக்கும் ஐபிசி 497வது பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால் பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாவில் நிலைக்குழுவின் பரிந்துரைகளை நிராகரித்து மேற்கூறிய மூன்றும் மீண்டும் குற்றங்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேஜையை காலியாக்கி இப்படி மசோதாக்களை அடுத்தடுத்து நிறைவேற்றுவது எதிரணி பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படாத கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுவது போன்றது” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சர்தார் 2 படப்பிடிப்பிற்கு தயாராகும் கார்த்தி?
வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி : முதல்வர் நேரில் ஆய்வு!
New Criminal Bills passed
Comments are closed.