டிஜிட்டல்  திண்ணை: புதிய மேயர்கள் யார்?  ஸ்டாலின் போடும் கணக்கு!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  நெல்லை, கோவை  மாநகராட்சிகளுக்கான புதிய மேயர் தேர்தல்கள்  பற்றிய  சோர்ஸ்களின் தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்திருந்தது.

அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.

 “கடந்த ஜூலை 3 ஆம் தேதி  நெல்லை மாநகர மேயர் சரவணன்,  கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.   பல மாதங்களாகவே  இவர்கள் இருவரையும் மையமாக வைத்து இவ்விரு மாநகராட்சிகளில் திமுக  கவுன்சிலர்களே  கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.   திமுக மேயர்களுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கினர்.

இதற்கு முடிவு கட்டும் விதமாகத்தான்  அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு  தேர்தல்  நடத்த உத்தரவிட்டார் ஸ்டாலின்.  அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி  நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலும், ஆகஸ்ட் 6ஆம் தேதி  கோவை மாநகராட்சி மேயர் தேர்தலும் நடைபெற இருக்கின்றன. கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்வு செய்ய வேண்டும். ஒருவருக்கு மேல் போட்டி இருந்தால் மட்டுமே தேர்தலுக்கு அவசியம் ஏற்படும்.

நெல்லை மத்திய மாவட்ட  செயலாளராக இருந்தவரும்  தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் மீண்டும் தனது ஆதரவாளரே மேயராக வரவேண்டும் என்று  தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.   ஆகஸ்ட் 1 ஆம் தேதி  நெல்லை- பாளையங்கோட்டையில்  அந்த மண்டலத்துக்கு உள்ளிட்ட கவுன்சிலர்களை  சந்தித்து பேசினார்  அப்துல் வகாப்.   அதேபோல  மேலப்பாளையத்திலும்  கவுன்சிலர்களை அழைத்துப் பேசியுள்ளார்.  ஆகஸ்ட் 2 ஆம் தேதி   தனது எம்எல்ஏ அலுவலகத்தில் நெல்லை, தச்சநல்லூர்  பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்களை  அழைத்து புதிய மேயர் பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஏறத்தாழ சுமார் 40 கவுன்சிலர்கள் அப்துல் வகாபின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.  அதனால் அவருடைய ஆதரவு பெற்றவரே  மேயராக வர முடியும் என்பது தான் நெல்லை மாநகராட்சியின் தற்போதைய நிலவரம்.    அதனால்தான் அப்துல் வகாப் தனது ஆதரவு கவுன்சிலர்களை  திரட்டி,  மீண்டும் தன் பாக்கெட்டிலேயே மேயர் என்ற நிலையை உருவாக்க நினைக்கிறார்.

திமுக தலைமை இதை விரும்புமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனென்றால்   ஏற்கனவே மேயராக இருந்த சரவணன்,  அப்துல் வகாபின் கைப்பிடிக்குள் தான் இருந்தார்.  ஆனால் ஒரு கட்டத்தில் அவர் வகாபுக்கு எதிராக செயல்பட்டதால்தான் கவுன்சிலர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டம் காட்டினார் அப்துல் வகாப்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இந்த பின்னணியில் மீண்டும் வகாப் ஆதரவாளருக்கே மேயர் பதவி அளிப்பதா அல்லது  வகாபுக்கு ஒத்துவராத ஒருவரை  மேயராக்கிவிட்டால் மீண்டும் பிரச்சனை செய்வார்களா  என்பது பற்றி எல்லாம் தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.

இதுபற்றி இறுதிமுடிவெடுக்க நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு,  நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி  காலை நெல்லை மாவட்ட திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பின் தலைமையோடு ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்கிறார்கள்.

இதேபோல கோவை  மாநகராட்சி மேயர் யார் என்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி  நடைபெற இருக்கிறது.   மண்டல தலைவர்கள் மீனா லோகு,  இளஞ்செல்வி கார்த்திக்,  தெய்வயானை தமிழ்மறை மற்றும்  அம்பிகா தனபால், சாந்தி முருகன் உள்ளிட்டோர் ரேசில்  தொடர்ந்து இருக்கிறார்கள். சென்னை சென்று பலமான லாபிகளிலும்  ஈடுபட்டுள்ளனர்.

கோவை  மாநகரத்தின் மேயர் யார் என்பதை  சமுதாய ரீதியாக முடிவெடுக்காமல்  கட்சி, நிர்வாக  பணிகளில்  திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்  என்று  மாநகர திமுக நிர்வாகிகள் தலைமையிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இந்த இரண்டு மேயர்  தேர்விலும்  திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்  போட்டிருக்கும் ஒரே உத்தரவு,   ’வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள் மீண்டும்  இதுபோன்ற  சச்சரவுகள் வெடிக்க கூடாது.  அந்த வகையில்  மேயர் தேர்வு இருக்க வேண்டும்’ என்பதுதான்.

புதிய மேயருக்கும் திமுக கவுன்சிலர்கள் தரப்பில் இருந்தே எதிர்ப்பு வந்தால் அது வருகிற சட்டமன்றத் தேர்தலில்  கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால்  அந்த அடிப்படையில்  தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார் ஸ்டாலின்”  என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

ராமருக்கு வரலாறு கிடையாதா? சிவசங்கருக்கு அண்ணாமலை பதில்!

நெருங்கும் மழைக்காலம்… சாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் வேலு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share