அசராத ஆவுடையப்பன், விடாத அப்பாவு: மீண்டும் அறிவாலயத்தில் நெல்லை பஞ்சாயத்து!

Published On:

| By Aara

நெல்லை மாவட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனுக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையிலான பஞ்சாயத்து மீண்டும் தொடங்கியிருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் இப்போதைய சபாநாயகர் அப்பாவுவுக்கும், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கும் இடையேயான அரசியல் மோதல் பற்றி கடந்த திமுக உட்கட்சித் தேர்தல் நேரத்தில் மின்னம்பலத்தில் விரிவாக  தகவல்களை வெளியிட்டிருந்தோம்.

திமுகவில் கடந்த வருடம் நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு சிட்டிங் மாசெ ஆவுடையப்பன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து  சபாநாயகர் அப்பாவுவின் தீவிர ஆதரவாளரும் பாளை ஒன்றிய செயலாளருமான தங்கபாண்டியன் போட்டியிட்டார். மனு தாக்கல் செய்வதற்கு முன் அப்போது சென்னை பசுமை வழிச்சாலையில் சபாநாயகரின் இல்லமான குறிஞ்சி இல்லம்( இப்போது குறிஞ்சி இல்லம் அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு மலரகம் இல்லத்தில் இருக்கிறார்)   சென்று அவரிடம் ஆசிபெற்று அதன் பின்னரே அறிவாலயம் சென்று மனு தாக்கல் செய்தனர்.

nellai dmk party avudaiappan appavu political crisis

சீனியரான எனக்கு எதிராக அந்த சின்னப் பையன் மனு தாக்கல் செய்வதா என்று ஆவுடையப்பன் திமுக தலைவர் ஸ்டாலினிடம் சென்று கூறிய பிறகு… கடந்த 2022  செப்டம்பர் 23 ஆம் தேதி அறிவாலயத்தில் முதன்மைச் செயலாளர் நேரு ஆவுடையப்பனையும், அப்பாவு ஆதரவாளர் தங்கபாண்டியனையும் அழைத்து பஞ்சாயத்து பேசி முடித்தார். அப்போது துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையும் இருந்தார்.  இதுபற்றி விரிவாக  ஆவுடையப்பன் Vs அப்பாவு: அறிவாலயத்தில் நேரு நடத்திய பஞ்சாயத்து முழு விவரம்   என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி விரிவாக வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளராக ஆவுடையப்பன் அறிவிக்கப்பட்டார். ஒரு வருடம் கூட முடியாத நிலையில் ஆவுடையப்பனுக்கு எதிராக இன்று (ஜூலை 14)  நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட சரி பாதி நிர்வாகிகள் மீண்டும் அறிவாலயத்தில் திரண்டு விட்டனர்.

இன்று காலை 10 மணிக்கு நெல்லை கிழக்கு மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களில் 6 ஒன்றிய, பேரூர்  செயலாளர்கள், 3 ஒன்றிய சேர்மன்கள் அறிவாலயத்துக்கு சென்று துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையிடம்  மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் பற்றி அடுக்கடுக்கான புகார்களை  கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.

பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய சேர்மனுமான கே.எஸ். தங்கபாண்டியன்  தலைமையில்தான் அவர்கள்  அறிவாலயம் சென்றிருக்கிறார்கள். இவர் தலைமையில் பாளை மத்திய ஒன்றிய செயலாளர்  போர்வெல் கணேசன், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணைத் தலைவருமான பி.சி.ராஜன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், (இவரது மனைவி சௌம்யாதான் நாங்குநேரி ஒன்றிய சேர்மன்), ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ்,  அவருடைய மனைவியான ராதாபுரம் ஒன்றிய சேர்மன் சௌமியா ஜெகதீஷ்  ஆகியோரும் கல்லிடைக்குறிச்சி பேரூர்  செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான எசக்கி பாண்டி,  திருக்குறுங்குடி பேரூர் செயலாளர் கசமுத்து, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாவட்ட கவுன்சிலர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர்  ஆவுடையப்பன் மீது புகார் அளித்துள்ளார்கள்.

புகார்கள் பற்றி அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.

“நாங்கள் அனைவருமே மாவட்ட செயலாளர் தேர்தலின் போதும் ஆவுடையப்பனை எதிர்த்தவர்கள். ஆனால் அப்போது நேரு நடத்திய பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு சென்றுவிட்டோம். ஆனால் இப்போது அப்பாவுவின் ஆதரவாளர்களை முழுமையாக களையெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆவுடையப்பன் செயல்பட்டு வருகிறார்.

மாவட்ட அணி பதவிகளில் அப்பாவு எதிர்ப்பாளர்களைத் தேடித் தேடி நியமித்திருக்கிறார்.  ஒன்றிரண்டு பதவிகளுக்கு அப்பாவு சொன்னவர்களை நியமித்து நடு நிலை போல காட்டிக் கொண்டிருக்கிறார்.  நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் திமுக ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஆனால் ஆவுடையப்பனின் நடவடிக்கைகளால் திமுகவுக்குள்ளேயே தேவர் சமுதாயத்தினருக்கும், நாடார் சமுதாயத்தினருக்கும் கசப்புணர்வு ஏற்படுவது போன்ற நிலை உருவாகி வருகிறது. இதைத் தலைமைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். இல்லையேல் திமுகவுக்குதான் இழப்பு ஏற்படும்.

இதையெல்லாம் தடுக்க  நாங்குநேரி, ராதாபுரம், பாளை தொகுதிகள்    ஆகியவற்றைப் பிரித்து  தனி மாவட்ட அமைப்பாக உருவாக்குங்கள்.  நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கானை இந்த புதிய மாவட்டத்துக்கும் பொறுப்பாளராக போடுங்கள் அல்லது எங்களிலேயே தங்கபாண்டியனை மாவட்ட பொறுப்பாளர் ஆக்குங்கள் ” என்று அன்பகம் கலையிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் ஒன்றிய சேர்மன்கள், “எங்கள் அரசுப் பணிகளில் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலையிட்டு டெண்டர் நடவடிக்கைகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதனால் மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்படுகின்றன” என்றும்  தனி புகாரை கொடுத்துள்ளனர்.

புகார் கொடுத்தவர்கள் அத்தனை பேரும் சபாநாயகர் அப்பாவு ஆதரவாளர்கள். இதனால் நெல்லை கிழக்கு மாவட்டத்தில் ஆவுடையப்பனுக்கும், அப்பாவுவுக்கும் இடையிலான பஞ்சாயத்து மீண்டும் அறிவாலயத்துக்கு வந்திருக்கிறது.  அடுத்தடுத்து நெல்லை மாவட்ட அரசியல் தொடர்பான பஞ்சாயத்துகள் அறிவாலயத்தில் தொடரும் என்றே தெரிகிறது.

-ஆரா

ரூ.928 கோடிக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல்!

“பிரான்சில் திருவள்ளுவர் சிலை” – பிரதமர் மோடி உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share