”ஹலோ மிஸ்டர்”: இளைஞரின் கேள்வியால் டென்ஷனான ஆட்சியர்

Published On:

| By Monisha

nellai collector get tension

பாளையங்கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகளை சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வு செய்து கொண்டிருந்த போது கேள்வி எழுப்பிய இளைஞரால் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கோபமடைந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்குழுவினர் இன்று (செப்டம்பர் 7) நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

முதல் கட்டமாக நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பாளையங்கால்வாயை சுத்தப்படுத்தும் பணிகளை சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

அங்கு நடைபெற்று வரும் பணி நிலவரம் குறித்து குழு தலைவர் வேல்முருகன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

nellai collector get tension

அந்த நேரத்தில் அங்கு வந்த தாமிரபரணி பாதுகாப்புக் குழுவை சேர்ந்த சிராஜ் என்ற இளைஞர் பாளையங்கால்வாய் சுத்தப்படுத்தும் பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை என சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

ADVERTISEMENT

குறிப்பாக ”பாளையங்கால்வாயில் வீடுகளில் இருந்து நேரடியாக கலக்கும் கழிவு நீரால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நீங்களே பாருங்கள் எந்தளவுக்கு கழிவுநீர் கலக்கிறது என்று. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

அதற்கு பதில் கூறிய குழு தலைவர் வேல்முருகன்  “இந்த குழுவின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரை இங்கே வரவழைத்து ஆய்வு செய்து வருகிறேன். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார் .

அதற்கு இளைஞர் சிராஜ், ”ஆட்சியரிடம் கூறியும் எந்த வேலையும் நடைபெறுவதில்லை என்று அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் பாளையங்கால்வாயை சீரமைக்கத் தனி குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

முதல் கட்டமாக கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி அடுத்தடுத்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக குழு தலைவர் வேல்முருகன் உறுதி அளித்தார் .

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேசத் தொடங்கினார். அப்போது இளைஞர் சிராஜ் குறுக்கிட்டதால் கோபம் அடைந்த ஆட்சியர், ஹலோ மிஸ்டர் கொஞ்சம் பொறுங்கள். இதுவரைக்கும் நீங்கள் பேசினீர்கள், நாங்கள் அமைதியாக கேட்டோம் அல்லவா. நான் பதில் கூறுகிறேன் கொஞ்சம் நேரம் அமைதியாக இருங்கள் என்று கூறி ஆட்சியர் தனது பேச்சை தொடங்கினார்.

அவர் பேசும்போது ”பாளையங்கால்வாயை சீரமைக்கும் திட்டத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம். கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாற்றுத்திட்டம் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விரைவில் பாளையங்கால்வாயில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியர் கார்த்திகேயன் கூறினார்.

இடையிடையில் இளைஞர் சிராஜ் குறுக்கிட்டதால் மேலும் கோபம் அடைந்த ஆட்சியர் எதற்கு இப்படி அவசரப்படுகிறீர்கள். கொஞ்சம் அமைதியாக சொல்வதை கேளுங்கள் என்று டென்ஷனோடு பதில் அளித்தார்.

பின்னர் ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் உட்பட அனைவரும் அங்கிருந்து காரில் ஏறிச் சென்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவரிடம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரை அருகில் வைத்துக் கொண்டே அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக குறை கூறிய இளைஞரால் பெரும் பரபரப்பு நிலவியது.

சரவணன்

தனபால் மீது மனைவி புகார்… எடப்பாடி மீது தனபால் புகார்!

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share