நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் இன்று (ஜூலை 5) அறிவித்துள்ளது.
இளங்கலை நீட் நுழைவு தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜூன் 23-ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முந்தைய நாள் ஜூன் 22-ஆம் தேதி இரவு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த திடீர் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,
“சில போட்டி தேர்வுகளின் சமீபத்திய குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு தேசிய தேர்வு வாரியம் நடத்தும் (என்டிஏ) முதுநிலை நீட் தேர்வின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். மாணவர்களின் நலன் கருதியும் தேர்வு முறையின் புனிதத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், 13 நாட்களுக்கு பிறகு முதுநிலை நீட் நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…