கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த நீங்கள் எப்படி நலமாக இருப்பீர்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 6) நீங்கள் நலமா? என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை… நாங்கள் நலமாக இல்லை” என்று கூறி முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருந்தார்.
அதிமுகவினர், #நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டு செய்து வருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “எதிர்க்கட்சி தலைவர் தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்.
விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்குப் பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போலச் சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
பொள்ளாச்சி இளம்பெண்களைச் சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த, ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
ஜெயலலிதா வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
SK: மிகப்பெரும் தொகைக்கு ‘விலை’ போன சிவகார்த்திகேயன் படம்
Shivaratri 2024: சிவராத்திரி, வாரயிறுதி விடுமுறை…136௦ சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
