விருதுநகரில் சிஏஏ தொடர்பாக அமைச்சர்களிடம் பெண் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டுறவுத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத் திறப்பு விழா இன்று (மார்ச் 15) நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு நிலையத்தை திறந்துவைத்து, முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு வங்கிக் கடனாக 8 லட்சம் ரூபாயை அமைச்சர்களிடமிருந்து பெற, முகமது கிலோபர் பாத்திமா சென்றார்.
அப்போது அமைச்சர்கள் இருவரையும் பார்த்து, “சிஏஏவுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்களின் வாக்கு இல்லையென்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏன் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி உள்ளிட்டவை குறித்து ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது.
அவரிடம் அமைச்சர் செல்லூர் ராஜு பொறுமையாக, “சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அமைதியாக இருங்கள்” என்று சமாதானப்படுத்தினர். ஆனாலும் சமாதானமடையாத பாத்திமா, “ சிஏஏவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்திருக்குமா” என்று திரும்பவும் கேட்டார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள், மேடையிலிருந்து அனுப்பிவைத்தனர்.
அரசு விழா மேடையில் வைத்து அமைச்சர்களிடம் பெண் ஒருவர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
**எழில்**
�,