அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 10) சென்னையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் என்.டி.ஏ.கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தான் தலைமை என்றும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறவேற்றப்பட்டது.
அதிமுக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட வருகிற டிசம்பர் 15 முதல் விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்தசூழலில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
வரும் டிசம்பர் 14ஆம் தேதி நயினார் நாகேந்திரன் டெல்லி செல்லவிருக்கிறார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் பேசுவார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என பாஜகவினர் கூறுகின்றனர்.

ஏற்கனவே ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்டோர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தனர்.
இதன்பின் அண்ணாமலை டிடிவி தினகரனையும் சந்தித்தார்.
இந்தசூழலில் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்வதும் அதற்கு முன்னதாக கூட்டணி கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
