தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. நடிகைகளில் அதிக சம்பளம் பெறுவதும் இவர் தான். தமிழில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ & மலையாளத்தில் ‘நிழல்’ படங்கள் இவருக்குச் சமீபத்தில் வெளியானது.
தற்பொழுது, ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படமும், விஜய் சேதுபதியுடன் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் தயாராகி வருகிறது. அதோடு, சோலோ நாயகியாக நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படம் சோனி லிவ் ஓடிடியில் பெரும் தொகைக்கு விலைபோயிருக்கிறது.
இந்நிலையில், மூன்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு இரண்டு படங்கள் வீதம் ஆறு படங்கள் நடிக்க ஒரே நேரத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை நயன்தாரா. முதலாவதாக, ட்ரீம் வாரியஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இரண்டு படங்கள் நடிக்கிறார். அதில், முதல் படத்தை எலி பட இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்க இருக்கிறாராம். இந்தப் படத்துக்காக பெரும் தொகை சம்பளமாகப் பேசப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, சிவப்பு மஞ்சள் பச்சை படத்தைத் தயாரித்த ரமேஷ் பி.பிள்ளை என்பவரின் ‘அபிஷேக் பிலிம்ஸ்’தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இரண்டு படத்துக்குச் சேர்த்து மொத்தமாக, 15 கோடிக்கு மேல் கேட்டிருக்கிறார் நயன்தாரா. பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக 11 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
மூன்றாவதாக, ஐசரி கணேஷ் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன்தாரா. ஆக, இந்த ஆறு படங்களுமே சோலோ ஹீரோயின் படங்களாக உருவாக இருக்கிறதாம். எப்படியும், இன்னும் இரண்டு வருடத்துக்கு நயன்தாரா கால்ஷீட் முழுமையாகிவிட்டது.
இந்த ஆறு படங்கள் மட்டுமின்றி மலையாளத்தில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசிலுடன் ‘பாட்டு’, தெலுங்கில் ஒரு படமும் நடித்துவருகிறார். அதோடு, தெலுங்கிலும் இரண்டு கதைகள் கேட்டு ஒப்பந்தம் செய்ய இருக்கிறாராம்.
பொதுவாக, ஹீரோக்களுக்கே வருடத்துக்கு ஒரு படம் வெளியாவது பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், எக்கச்சக்கப் படங்களை கமிட் செய்து, நடிகர்களின் பட லிஸ்டையே மிஞ்சிவிட்டார் நயன்தாரா. நிஜமாகவே, பாராட்டுக்குரிய வளர்ச்சி.
**- ஆதினி**
�,